பாகிஸ்தானுடனான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தேசநலனுக்கு எதிரானது.. சொல்வது பாபா ராம்தேவ்
நாக்பூர்: 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுவது யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது தேசநலனுக்கு எதிரான என பாபா ராம்தேவ் விமர்சித்துள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அந்த தமிழ்நாடு வீரரிடம் ஜாக்கிரதை.. பாக். வீரர்களை எச்சரிக்கும் முன்னாள் ஜாம்பவான்.. செம பின்னணி!
இந்தியா-பாக். மோதல்
குரூப்-1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, வங்கதேசம் ஆகியவையும் குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியாவும் இடம் பெற்றுள்ளன. இந்த குரூப்புகளில் இடம்பெற்ற அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதுகின்றன. இதனடிப்படையில் இன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுவது உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப் பெரிய ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.
பாபா ராம்தேவ்
இந்த நிலையில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாபா ராம்தேவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் பாபா ராம் தேவ். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் பாபா ராம்தேவ். பின்னர் அவரது மருந்துக்கு மத்திய அரசு தடையும் விதித்தது.
தேசநலனுக்கு எதிரானது
தற்போது கிரிக்கெட் விளையாட்டிலும் தலையை கொடுத்திருக்கிறார் பாபா ராம்தேவ். நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாபா ராம்தேவ், தற்போதைய நிலையில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது தேசநலனுக்கு எதிரானது. ராஷ்டிரதர்மத்துக்கு எதிரானது. பயங்கரவாதத்துடன் ஒருபோதும் நாம் விளையாட்டை விளையாட முடியாது. இதை தவிர்க்க வேண்டும் என்றார் பாபா ராம்தேவ்.
ராம்தேவ் எதிர்ப்பு ஏன்?
நாடு விடுதலை அடைந்த பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே மூன்று யுத்தங்கள் நிகழ்ந்துள்ளன. இன்றும் காஷ்மீர் பிரச்சனையை முன்வைத்து இந்தியாவுடன் மல்லுக்கட்டுகிறது பாகிஸ்தான். உலகை உறையை வைத்த மும்பை தாக்குதல்களின் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்புதான் இருந்தது. அதனால் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பாபா ராம்தேவ் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.