உங்களுக்கு கல்யாணமாகலையே பாபாஜி.. ராம்தேவுக்கு அமெரிக்கா கொடுத்த "ஷாக்"!
இந்தூர்: எனக்குக் கல்யாணமாகவில்லை, சொந்தமாக வங்கிக் கணக்கு இல்லை என்பதால் எனக்கு அமெரிக்கா செல்ல விசா மறுக்கப்பட்டதாக யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
நாட்டின் பல்வேறு ஆயுர்வதே படைப்புகளை ஸ்வாஹா செய்யும் அளவுக்கு ராம்தேவின் பதஞ்சலி குழுமத்தின் படைப்புகள் படு வேகமாக "விற்கப்பட்டு" வருகின்றன. ரூ. 4500 கோடி மதிப்பிலானது பதஞ்சலி குழுமம். அதை நிறுவியவரான ராம்தேவ், தன்னை ஒரு முறை அமெரிக்கா விசா அளிக்க மறுத்து நிராகரித்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்தூரில் நேற்று நடந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது தெரிவித்தார் ராம்தேவ். அவரது பேச்சிலிருந்து:
கல்யாணமாகாத காரணத்தால்
நான் முதல் முறை அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தபோது அது எனக்கு மறுக்கப்பட்டது. நான் காரணம் கேட்டபோது, பாபாஜி உங்களுக்கென்று சொந்தமாக வங்கிக் கணக்கு இல்லை. மேலும் உங்களுக்கு இன்னும் கல்யாணுமும் ஆகவில்லை என்று காரணம் கூறினார்கள்.
பிடிவாதம்
உண்மையில் அதற்கு வேறு காரணம்தான் இருக்க முடியும். அதுகுறித்து நான் வலியுறுத்திக் கேட்டும் கூட சொல்ல மறுத்து விட்டனர். எனக்கு விசா தரவே இல்லை.
கூப்பிட்டு 10 வருட விசா கொடுத்தனர்
ஆனால் பின்னர் ஐ. நா கூட்டம் ஒன்றில் நான் பேச அழைக்கப்பட்டேன். அப்போது அவர்களே கூப்பிட்டு நான் கேட்காமலேயே 10 வருட கால விசாவைக் கொடுத்தனர்.
உலக குடிமகன்
துறவிகள், ஆன்மீகத் தலைவர்கள் சர்வதேச குடிமக்கள் ஆவர். நிதியமைச்சரா என்ன அந்தஸ்தில் இங்கு கூப்பிட்டுள்ளனரோ அதே அந்தஸ்துதான் எனக்கும் ஒரு உலக குடிமகனாக நான் இங்கு வந்துள்ளேன் என்றார் ராம்தேவ்.