2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்தி விடலாமே.. சொல்கிறார் பாபா ராம்தேவ்
2000 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடிப்பதும், அவற்றை பதுக்குவதும் மிகவும் எளிதாகி விடும் வாய்ப்புள்ளது என பாபா ராம் தேவ் கூறியுள்ளார்.
ராய்ப்பூர்: எதிர் காலத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தி விடலாம் என யோகா குரு பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்து கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். மோடியின் இந்த நடவடிக்கை துணிச்சலானது என யோகா குரு பாபா ராம் தேவ் பாராட்டு தெரிவித்தார்.
இந்தநிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பாபா ராம் தேவ் கூறுகையில், "உயர் மதிப்பில் உள்ள ரூ.2000 நோட்டுகள் கூட போலி நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு தற்போது புழக்கத்தில் வந்துள்ளது. ரத்து செய்யப்பட்ட மற்ற 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை போலவே தற்போது இந்த போலி 2000 ரூபாய் நோட்டுகளும் நடமாட்டத்தில் உள்ளன.
2000 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடிப்பதும், அவற்றை பதுக்குவதும் மிகவும் எளிதாகி விடும் வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் பணத்தை பயன்படுத்தினால் அதிக தேவை ஏற்படும். அதற்கு பதிலாக, நாம் அனைவரும் பணம் இல்லா பரிவர்த்தனைக்கும், பணமில்லா பொருளாதாரத்துக்கும் மாற வேண்டும்.
டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி நாம் நகரும்போது, பொருளாதாரத்தில் நம்பகத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்யப்படும். மேலும் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் இனிவரும் காலத்தில் 2000 ரூபாய் கரன்சியை அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நாட்டை வலிமையாக்க பிரதமர் மோடி செயல்படுத்தும் அனைத்து திட்டங்கள் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.