கட்சி பணி.. அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ், ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் இன்று ராஜினாமா?
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சிப் பணிக்காக ஜெய்ராம் ரமேஷ், ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் ஆகியோர் மத்திய அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்யக் கூடும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் மத்திய அமைச்சர்கள் சிலரை ராஜினாமா செய்ய வைத்து கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபடுத்த காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.
முதல் கட்டமாக ராகுல் காந்தியின் தீவிர ஆதரவாளர்களான ஜெய்ராம் ரமேஷ், ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் ஆகியோர் அமைச்சர் பதவிகளை இன்று ராஜினாமா செய்யலாம் எனக் கூறப்படுகிறது.
ஜெய்ராம் ரமேஷ்
இவர்களில் ஜெய்ராம் ரமேஷை ஏற்கெனவே மிசோரம், ஜார்க்கண்ட், அருணாசலப்பிரதேச மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டிருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் நியமித்திருக்கிறது. மேலும் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.
சிந்தியா, பைலட்
இதேபோல் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்த போதிருந்தே ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் அந்த மாநில காங்கிரஸ் தலைவர்களாக நியமிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் இருவருக்கும் போதிய அனுபவம் இல்லாததையே சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணம் என்று அம்மாநில மூத்த தலைவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
சிந்தியாவுக்கு எதிர்ப்பு
மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரசார குழு தலைவராக சிந்தியா நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் 230 தொகுதிகளில் 58ஐத்தான் காங்கிரஸால் கைப்பற்ற முடிந்தது.
பைலட்டுக்கும் எதிர்ப்பு
அதேபோல் ராஜஸ்தானில் சச்சின் பைலட்டின் சொந்த தொகுதியான ஆஜ்மீரில் 8 சட்டசபை தொகுதிகளையுமே காங்கிரஸ் பறிகொடுத்தது. இதனால் அம்மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியிலேயே சச்சின் பைலட்டுக்கு எதிர்ப்பு இருக்கிறது.
இன்று ராகுலுடன் ஆலோசனை - ராஜினாமா?
இருப்பினும் ஜெய்ராம் ரமேஷ், ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட் ஆகியோரை கட்சிப் பணிக்காக களம் இறக்குவது என்ற முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறாராம். இம்மூவரும் இன்று ராகுல் காந்தியை நேரில் சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் தங்களது ராஜினாமா அறிவிப்பை மூவரும் வெளியிடலாம் என்கிறது காங்கிரஸ் வட்டாரங்கள்.