ராம்ஜேத்மலானியின் பாயிண்டுகள், வாதம், முயற்சி.. எல்லாம் வீண்!
ங்களூர்: ஜெயலலிதாவுக்கு சாதகமாக சில சட்டப் பிரிவுகள் இருந்த போதும், அவருக்காக ஆஜரான ராம்ஜேத்மலானி பல சுப்ரீம் கோர்ட் வழக்கின் தீர்ப்புகளை முன்வைத்து ஆணித்தரமாக வாதாடியபோதிலும், எல்லாமே சாதகமாக இருந்தும் கூட, நீதிபதியின் முடிவால் ஜெயலலிதாவுக்கு பாதகமான நிலை ஏற்பட்டு விட்டது.
இன்று மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் கோர்ட் மீண்டும் கூடியதும் ராம்ஜேத்மலானி தனது 2வது கட்ட வாதத்தை முன்வைத்தார்.
முன்னதாக இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ராம்ஜேத்மலானி வாதிடுகையில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுதான் தண்டனை தரப்பட்டுள்ளது. எனவே அரசுத் தரப்பு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை. அவசியமும் இல்லை. இதுதொடர்பாக லில்லி தாமஸ், ரவி பாட்டீல் ஆகியோரது வழக்குகளில் உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதேபோல ஜெயலலிதாவுக்கும் ஜாமீன் வழங்கலாம்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தவர். அவரது உடல் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். அவருக்கு ஜாமீன் அளித்தால் அவர் எங்கும் தப்பியோடி விட மாட்டார். அவர் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிப்பவர் ஆவார். கோர்ட் உத்தரவிட்டபோதெல்லாம் அவர் நேரில் ஆஜராகியுள்ளார்.
நமது எம்.ஜி.ஆர். செய்தித் தாள் டெபாசிட் விவகாரம் தொடர்பாகவும், சொத்துக்களை மதிப்பிடுவது தொடர்பாகவும் கீழ் கோர்ட் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா கருத்தை செலுத்தி ஆராயவில்லை. சொத்துக்களை உரிய நிபுணர்களைக் கொண்டு மதிப்பிடவில்லை. மேலும் பல ஆவணங்களை நீதிபதி சரிவர பார்க்கவில்லை.
ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் பிறப்பித்துள்ள தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுவை விசாரிக்க தாமதம் ஏற்படும் என்பதால் முதலில் ஜாமீன் வழங்க வேண்டும்.
ஜெயலலிதாவிடம் உள்ள நகைகள் 1971ம் ஆண்டு அவரது பெற்றோர்களிடமிருந்து அவருக்கு வந்து சேர்ந்தவையாகும். அவரது குடும்ப நகை. ஆனால் இந்த வாதத்தை தனி நீதிமன்றம் கண்டு கொள்ளவே இல்லை என்று அவர் நீதிபதி சந்திரசேகரா முன்பு வாதிட்டார். பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ராம்ஜேத்மலானி வாதிட்டார்.
ராம்ஜேத்மலானியின் 2வது கட்ட வாதம்
மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் ராம்ஜேத்மலானி தனது 2வது கட்ட வாதத்தைத் தொடங்கினார். அப்போது அவர் சுதாகரன் திருமணச் செலவு குறித்த வாதத்தை முன்வைத்தார். "ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவை ஜெயலலிதா செய்யவில்லை. அதை அவர் ஏற்கவில்லை. மாறாக பெண் வீட்டார்தான் செலவு செய்தனர், அனைத்து செலவையும் அவர்கள்தான் ஏற்றனர்" என்று அவர் வாதிட்டார்.