ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு நேர்ந்த அவமானத்தைப் பாருங்க!
சிம்லாவில் உள்ள ஜனாதிபதி ஓய்வு மாளிகைக்குள் செல்ல பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சிம்லா: ஹிமாசல பிரதேசத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் செல்ல ராம்நாத் கோவிந்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில் அப்பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் பாஜக சார்பில் பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் கோவிந்த்.
சிறுபான்மையினருக்கு எதிரானவர்
கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் வேற்றுகிரகவாசிகள் என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருந்ததாகவும், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் ரங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரையை நிராகரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பழைய சர்ச்சை பேச்சு தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
சிம்லாவுக்கு டூர்
பாஜக ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், கடந்த மாதம் 28-ஆம் தேதி சிம்லாவுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்தார். அவரும், அவரது மனைவியும் அரசு வாகனத்தில் சிம்லாவில் உள்ள இடங்களை சுற்றி பார்த்தனர்.
குடும்பத்தினர் தனி வாகனத்தில்...
அவருடன் வந்திருந்த மற்ற குடும்ப உறுப்பினர்கள் வேறு வாடகை வாகனத்தில் சுற்றிப் பார்த்தனர். சிம்லாவில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள மசோப்ரா மலைப்பகுதி உள்ளது.
ஜனாதிபதி ஓய்வு மாளிகை
அங்குள்ள ஜனாதிபதி ஓய்வு மாளிகைக்கு சென்று சுற்றிப் பார்க்க விரும்பி தன் குடும்பத்தினருடன் சென்றார் ராம்நாத். ஆனால் அந்த மாளிகைக்குள் செல்ல முன் அனுமதி பெற்றால் மட்டுமே அனுமதி அளிக்க முடியும் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்து விட்டனர். இதனால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டார். இந்த தகவல்கள் தற்போது ஊடகங்களில் கசிந்துள்ளன.
ஜனாதிபதியானால்...
தற்போது ஜனாதிபதி வேட்பாளர் ஆகிவிட்டார் ராம்நாத் கோவிந்த். ஒரு வேளை அவர் வெற்றி பெற்று ஜனாதிபதியாகிவிட்டால், எந்த மாளிகையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதோ அந்த மாளிகைக்கு யாருடைய முன் அனுமதியும் பெறாமல் அவரால் செல்ல முடியும்.