12 ஏக்கரில் ஆசிரமம், பி.எம்.டபுள்யூ. மெர்சிடீஸ்: கண்ணை கட்டும் சாமியார் ராம்பாலின் சொத்துக்கள்
ஹிஸார்: ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் ராம்பால் 12 ஏக்கர் ஆசிரமத்தில் வசித்து வந்தார். அவரிடம் பி.எம்.டபுள்.யூக்கள், மெர்சிடீஸ் பென்ஸ்கள் உள்ளிட்ட பல சொகுசு கார்கள் உள்ளன.
கடந்த 200ம் ஆண்டு ஹரியானா அரசின் நீர்பாசன துரையில் ஜூனியர் என்ஜினியராக இருந்த ராம்பால் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் ஆன்மீக பாதையில் சென்று சர்குரு ராம்பால் ஜி மகராஜ் ஆனார். அவர் தலைமை வகிக்கும் பிரிவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.100 கோடி ஆகும்.
63 வயதாகும் ராம்பலின் ஆசிரம் ஹரியானா மாநிலம் பர்வாலாவில் 12 ஏக்கரில் அமைந்துள்ளது. அவருக்கு சொந்தமாக பி.எம்.டபுள்.யூக்கள், மெர்சிடீஸ் பென்ஸ்கள் உள்ளிட்ட பல சொகுசு கார்கள் உள்ளன. ஆசிரமத்தின் சுற்றுச்சுவர் 30 அடி உயரமானது. ஆசிரமத்தில் ராம்பாலின் முக்கிய பக்தர்களுக்கு என்று ஏ.சி. அறைகள் உள்ளன. அவர் உரையாற்றும் அறையில் எல்.இ.டி. திரைகள் உள்ளன.
ராம்பால் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளார். அவரது ஃபேஸ்புக் பக்கத்தை நேற்று மட்டும் 2 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். அவரது உரைகளை பிறர் பார்க்க யூடியூப் சேனல் வைத்துள்ளார்.
ராம்பாலுக்கு ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப் மற்றும் டெல்லியில் 25 லட்சம் பக்தர்கள் உள்ளார்களாம். கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ராம்பால் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பிறகு அவர் ஹரியானா மாநிலம் ரோதக்கில் இருந்த தனது தலைமை ஆசிரமத்தை பர்வாலாவுக்கு மாற்றினார். பர்வாலாவில் மேலும் ஒரு ஆசிரமத்தை கட்டி வருகிறார். அவருக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் சொத்துக்கள் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் அவர் 43 முறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத அவரை போலீசார் பலகட்ட பிரச்சனைகளுக்கு பிறகு நேற்று இரவு கைது செய்தனர்.
ஹரியானா மாநிலம் சோனேபட்டில் விவசாய குடும்பத்தில் பிறந்த ராம்பால் தாஸ் என்ஜினியரிங் டிப்ளமோ முடித்தார். 48 வயது வரை ஜூனியர் என்ஜினியராக இருந்த அவர் கவனக்குறைவு காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது