ஆசிரமத்தில் 6 பேர் பலி- ராம்பாலை கைது செய்ய எந்த எல்லைக்கும் செல்வோம்: ஹரியானா டிஜிபி
ஹிசார்: ஆசிரமத்துக்குள் பதுங்கியிருக்கும் சர்ச்சை சாமியார் ராம்பாலை கைது செய்ய எந்த எல்லைக்கும் செல்வோம் என்றும் இதுவரை ஆசிரமத்தில் இருந்து 6 பேர் உயிரிழந்துள்ளனர்.. அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று ஹரியானா டிஜிபி வஷிஸ்த் எச்சரித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராம்பாலை கைது செய்ய 3வது பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம். ஆனால் ராம்பாலை கைது செய்ய விடாமல் அவரது ஆயுதம் தாங்கிய குண்டர்கள் போலீசார் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.
இந்த வன்முறை களேபரங்களுக்கு மத்தியில் ஆசிரமத்தின் ஒருபகுதியை இடித்து உள்ளே நுழைந்த போலீசார் ராம்பாலை தேடினர். ஆனால் நள்ளிரவு வரை தேடியும் அவர் சிக்கவில்லை.
இந்த நிலையில் இன்று சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஹரியானா டிஜிபி வஷிஸ்த் கூறியதாவது:
ராம்பால் ஆசிரமத்துக்குள்தான் பதுங்கியிருக்கிறார். அவருடன் நாங்கள் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தப் போவதும் கிடையாது.
நீதிமன்ற உத்தரவுப்படி ராம்பாலை கைது செய்ய எந்த ஒரு எல்லைக்கும் செல்ல நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இதனால் ராம்பால் சரணடைவதுதான் ஒரே வழி.
ராம்பால் ஆசிரமத்தில் இருந்து மொத்தம் 10 ஆயிரம் பேரை வெளியேற்றிவிட்டோம். இன்னமும் 5 ஆயிரம் பேர் ஆசிரமத்துக்குள் உள்ளனர்.
200 சமையல் எரிவாயு சிலிண்டர்கள், பல நூறு லிட்டர் பெட்ரோல் ராம்பால் ஆசிரமத்தில் இருக்கின்றன. இதனால் தாக்குதல் நடவடிக்கையை மெதுவாகத்தான் கவனமுடன் மேற்கொண்டு வருகிறோம்.
4 உடல்கள்
இதுவரை ராம்பால் ஆசிரமத்தில் இருந்து 4 பேரின் உடல்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நேற்றைய வன்முறையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தாய் மகள் ஏற்கனவே உயிரிழந்துள்ளர். மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
4 பேர் எப்படி உயிரிழந்தனர் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு வஷிஸ்த் கூறினார்.
இவ்வாறு வஷிஸ்த் கூறினார்.