அம்பரீஸ் உள்குத்துதான் தோல்விக்கு காரணம்: ‘குத்து’ ரம்யா புகார்
பெங்களூர்: தனது தோல்விக்கு நடிகர் அம்பரீஷ்தான் காரணம் என நடிகை குத்து ரம்யா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழில் ‘குத்து', ‘பொல்லாதவன்', 'வாரணம் ஆயிரம்', ‘சிங்கம்புலி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா. கர்நாடகாவை சேர்ந்தவர். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாண்டியா தொகுதியில் ரம்யா போட்டியிட்டார். இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் புட்டராஜுவிடம் தோல்வி அடைந்தார்.
காங்கிரஸ் கட்சியினரே தனக்கு எதிராக வேலை செய்து தோற்கடித்து விட்டனர் என்று ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார். தற்போது தனது தோல்விக்கு நடிகர் அம்பரீஷ்தான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
அம்பரீஷ் மீது அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடமும் புகார் மனு அளித்துள்ளார் அதில் கூறியுள்ளதாவது:
எனது தாத்தாவான முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கும், அம்பரீஷ்க்கும் நீண்ட நாட்களாக பகை இருந்தது. இதன் காரணமாக நான் தேர்தலில் நிற்பது அவருக்கு பிடிக்கவில்லை. தாத்தாவுடனான மோதலில் என்னை தோற்கடித்து விட்டார் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கன்னட நகரான அம்பரீஷ் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு மாண்டியா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட ரம்யா வெற்றி பெற்று லோக்சபாவிற்குள் காலடி எடுத்துவைத்தார். இதையடுத்து லோக்சபா பொதுத்தேர்தலில் அதே தொகுதியில் ரம்யாவிற்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.