பாக். மட்டுமல்ல இலங்கையும் பிடிக்கும்.. மன்னிப்பு கேட்க முடியாது.... "குத்து" ரம்யா திட்டவட்டம்
பெங்களூர்: பாகிஸ்தான் குறித்த தனது கருத்தில் பின்வாங்க போவதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியும், நடிகையுமான "குத்து" ரம்யா (திவ்யா ஸ்பந்தனா) தெரிவித்துள்ளார்.
சார்க் நாடுகளின் இளம் எம்.பிக்கள் ஆலோசனை கூட்டத்திற்காக பாகிஸ்தான் சென்று வந்தவர் ரம்யா. பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிகர், பாகிஸ்தானை நரகம் என கூறியிருந்த நிலையில், தனது அனுபவத்தில் பாகிஸ்தானிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்றும், அது நல்ல நாடு, நரகம் இல்லை என்றும் ரம்யா கருத்து கூறினார்.
காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் முட்டி மோதி வரும் நிலையில், ரம்யாவின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் மீது தேச விரோத வழக்கு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன், பெங்களூர் ஜூடிசியல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கறிஞர் விட்டல் கவுடா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரம்யா, எல்லையால் நாடுகள் அடிப்படையில் மக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அதற்காக பிற நாட்டு மக்களை வெறுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்த நாட்டில், இப்போது எளிதாக முத்திரை குத்தப்பட்டுவிடுகிறது. எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. ஒருவர் கூறிய கருத்தை கண்டிப்பாக ஏற்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது. இதுதான் ஜனநாயகம்.
இந்த கருத்துக்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்பது அகம்பாவத்தால் அல்ல. இதற்கு மன்னிப்பு கேட்பது, சரியான நடைமுறையாக இருக்காது என்பதால்தான். எனக்கு வங்கதேசத்தையும் பிடிக்கும், இலங்கையையும் பிடிக்கும், அதற்காக நான் நாட்டைவிட்டு வெளியேறப்போவதில்லை. எனது நாய்களை விட்டும் போகப்போவதில்லை. இவ்வாறு ரம்யா தெரிவித்துள்ளார்.