மோடி நிறைய செய்திருக்கார்னு நம்பிட்டேன், அப்புறம் தான் உண்மை தெரிஞ்சது: நடிகை ரம்யா
பெங்களூர்: செய்திகளை பார்த்து குஜராத்திற்காக மோடி நிறைய செய்திருக்கிறார் என்று நானும் நம்பிவிட்டேன். பின்னர் நேரில் சென்று பார்த்தபோது தான் உண்மை தெரிய வந்தது என்று நடிகையும், எம்.பி.யுமான ரம்யா தெரிவித்துள்ளார்.
நடிகையும், இளம் எம்.பி.யுமான ரம்யா ட்விட்டரில் குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான மோடியின் கொள்கைகளை தாக்கி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது,
ராகுலின் கெரியரை முன்னோக்கி எடுத்துச் செல்வது தான் காங்கிரஸின் ஒரே குறிக்கோள் என்று மோடி கூறுகிறார். அப்படி என்றால் உங்களுடையது மட்டும் என்னவாம் சார்? என்று கேட்டுள்ளார்.
முன்னதாக ரம்யா ட்வீட் செய்தது,
முதலில் செய்திகளை பார்த்து பிறரை போன்று நானும் மோடி குஜராத்திற்கும், அதன் முன்னேற்றத்திற்கும் நிறைய செய்திருக்கிறார் என்று நம்பிவிட்டேன். பின்னர் அகமதாபாத் சென்று பார்த்த போது தான் இது என்னாது? என்று தோன்றியது. மாநிலத்தில் நகர்ப்புறங்களில் ஏதோ முன்னேற்றம் உள்ளதே தவிர மனித முன்னேற்றத்தையே காணோம். புள்ளி விவரப்படி பார்த்தால் குஜராத் கர்நாடகாவை விட முன்னேற்றத்தில் குறைவாகவே உள்ளது. ஏன் ஹரியானா கூட குஜராத்தை விட நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.