ஏஐபி ரோஸ்ட் ஷோ... ரன்வீர்சிங், தீபிகா படுகோனே, சோனாக்ஷி சின்ஹா மீது வழக்குப் பதிவு!
மும்பை: ஏஐபி ரோஸ்ட் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக தீபிகா படுகோனே, ரன்வீர்சிங் மற்றும் சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் மீது மும்பைப் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களை விருந்தினர்களாக அழைத்து, அவர்கள் முன்னிலையிலேயே அவர்களை மோசமான வார்த்தைகளால் விமர்சிப்பது, ஆபாசமாக பேசுவது என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி தான் ரோஸ்ட் ஷோ என்பது. அதாவது வறுத்தெடுப்பது.
வெளிநாடுகளில் பிரபலமான இந்த நிகழ்ச்சி தற்போது இந்தியாவிற்கும் வந்து விட்டது. சமீபத்தில், இந்த ரோஸ்ட் ஷோ நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு வழங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
இந்தி நடிகர் கரன்ஜோகர் ஏற்பாடு செய்திருந்த ‘ஏஐடி ரோஸ்ட் ஷோ' என்ற இந்த நிகழ்ச்சி ஸ்டேடியம் ஒன்றில் நடந்தது. இதில் இந்தி நடிகர்கள் ரன்வீர்சிங், அர்ஜுன் கபூர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். தீபிகா படுகோனோ பார்வையாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 4000 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் வீடியோப் பதிவு யுடியூப்பிலும் வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், இந்த நிகழ்ச்சியில் ஆபாச வார்த்தைகள் பரிமாறப் பட்டதாகவும், செக்ஸ் காமெடிகள் கூறியதாகவும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிர அரசும் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து பண்ட்கார்டன் போலீசார் விசாரணை நடத்தி டைரக்டர் கரன்ஜோகர், நடிகர்கள் ரன்வீர்சிங், அர்ஜுன்கபூர், நடிகை தீபிகா படுகோனோ, காமெடி நடிகர் அதிஷ்மாத்யூ உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.