பழிக்குப் பழி... பலாத்கார குற்றவாளியின் 16 வயது தங்கையை கடத்தி பலாத்காரம் செய்த கும்பல்
லக்னோ: பலாத்கார குற்றவாளியின் 16 வயது தங்கையை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
கடந்த மாதம் 25ம் தேதி உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மீது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று குற்றம் சாட்டப்பட்ட வாலிபரின் வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பலொன்று, வாலிபரின் 16 வயது தங்கையைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். திங்களன்று மிர்சா தில்லா பகுதியில் இருந்து அச்சிறுமி மீட்கப்பட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த அச்சிறுமியின் உறவினர்கள் காக்ராலி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ சோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும், குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அம்மாநில போலீஸ் உயரதிகாரி குல்தீப் குமார் தெரிவித்துள்ளார்.