குழந்தைகளுக்கு சற்றும் பாதுகாப்பே இல்லாத ம.பி., உ.பி....பலாத்காரம், கொலையில் முதலிடத்தில் ம.பி.!
போபால்: 2013ம் ஆண்டில் நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில் தான் அதிக அளவில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
2013ம் ஆண்டில் எத்தனை குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர், எத்தனை குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர், எத்தனை குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை அரசு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு,
பலாத்காரம்
2013ம் ஆண்டில் நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில் தான் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 112 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தை அடுத்து உத்தர பிரதேசத்தில் 1381 குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். நாகாலாந்தில் குறைந்தபட்சமாக 3 குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
கொலை
2013ம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் தான் அதிகபட்சமாக 482 குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அடுத்ததாக மத்திய பிரதேசத்தில் 114 குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கோவா, புதுச்சேரி, சிக்கிம், நாகாலாந்தில் குழந்தைகள் யாரும் கொலை செய்யப்படவில்லை.
கடத்தல்
நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில் தான் அதிகமாக 6 ஆயிரத்து 2 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 5 ஆயிரத்து 809 பேரும், மத்திய பிரதேசத்தில் 2 ஆயிரத்து 262 பேரும் கடத்தப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக மிசோரமில் 2 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு
2013ம் ஆண்டில் தமிழகத்தில் 419 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 83 குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தவிர 499 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர்.