பலாத்காரம் செய்யப் பட்ட 9 வயது சிறுமிக்கு சிகிச்சை மறுப்பு... டெல்லி மருத்துவமனைக்கு நோட்டீஸ்
டெல்லி: பலாத்காரம் செய்யப்பட்ட 9 வயது சிறுமிக்கு சிகிச்சை தர மறுத்த மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு டெல்லி அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி, சுபாஷ் நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த திங்களன்று மாலை தனது உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். பாதிக்கப் பட்ட அச்சிறுமியை சிகிச்சைக்காக அருகில் இருந்த சவ்டர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்து விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இது தொடர்பாக தகவல் அறிந்த டெல்லி அரசு, சம்பந்தப்பட்ட மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் ஜூன் 1ம் தேதிக்குள், சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டை சவ்டர்ஜங் மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக சவ்டர்ஜங் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ராஜ்பால் கூறுகையில், ‘பலாத்காரம் செய்யப் பட்ட 9 வயது சிறுமியை சிகிச்சைக்காக திங்களன்று இரவு 9 மணிக்கு அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர். அச்சிறுமிக்கு இங்குள்ள மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர்.
மேலும், பலாத்காரம் செய்யப் பட்டது தொடர்பாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அது தொடர்பான ஆவணங்கள் கிடைத்ததும் மேற்கொண்டு சில பரிசோதனைகள் செய்யப் படும் என்றும் தெரிவித்தோம். ஆனால், அதற்கு மறுத்த அச்சிறுமியின் குடும்பத்தார், சிகிச்சை தேவையில்லை எனக் கூறி அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர்' எனத் தெரிவித்துள்ளார்.
அதோடு, சவ்டர்ஜங் மருத்துவமனை மத்திய அரசுக்கு சொந்தமானது என்றும், எனவே, இது தொடர்பான விளக்கம் விரைவில் டெல்லி அரசுக்கு தரப்படும் என்றும் ராஜ்பால் கூறியுள்ளார்.