திடீர் சுகவீனம்... மும்பை மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவ்
பீகாரில் நடந்து முடிந்த 10 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் லாலு - நிதீஷ் கூட்டணிக்கு சிறப்பான வெற்றி கிடைத்துள்ள நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மும்பையில் உள்ள பிரபல இதய நோய் சிகிச்சைக்கான மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அங்கு இதய நோய்க்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
எனினும் லாலுவின் உடல்நிலை குறித்து கவலையடைய தேவையில்லை. அவருக்கு வழக்கமான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் தேவைப்பட்டால் அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த பீகார் இடைத்தேர்தலில் நிதிஷ்குமார் - லாலுபிரசாத் கூட்டணி பாஜக வீழ்த்த 20 ஆண்டுக்குப்பின் ஒன்று சேர்ந்து போட்டியிட்டன. இதில் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 4 இடங்களே பாஜகவுக்குக் கிடைத்துள்ளது.
பகையை மறந்து இணைந்த இக்கட்சிகளின் கூட்டணியும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப் பேரவை தேர்தலிலும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.