அரசு மருத்துவமனையில் கோமா நோயாளியின் கண்ணை கடித்த எலி... தந்தை புகார்
அரசு மருத்துவமனையில் கோமா நிலையில் உள்ள நோயாளியின் கண்ணை எலி கடித்துவிட்டதாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.
மும்பை: மும்பை அரசு மருத்துவமனையில் கோமா நிலையில் உள்ள நோயாளியின் கண்ணை எலி கடித்துவிட்டதாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.
மும்பையில் சாலை விபத்தில் தலையில் அடிபட்டதால் கோமா நிலைக்கு சென்ற பரமீந்தர் குப்தா (27) என்பவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் சுமார் மார்ச் மாதம் முதலே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மூளையில் ரத்தம் கட்டியுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவரது நினைவு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து ரூ 6 லட்சம் கட்டுமாறு மருத்துவமனை நிர்வாகம் பரமீந்தர் தந்தை ராம் குப்தாவை நிர்பந்தித்தது.
பொது வார்டு
இதையடுத்து அவர் ஜோகேஸ்வரியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பரமீந்தரை கடந்த 21-ஆம் தேதி மருத்துவர்கள் பொது சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளனர்.
அதிர்ச்சி
பரமீந்தர் கோமா நிலையில் இருந்தபோதிலும் அவரது நிலை மோசமான நிலையில் உள்ளபோதிலும் அவர் பொது பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதி அவரது மகனுக்கு அருகில் இரு எலிகள் இருந்ததை ராம் குப்தா பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மருத்துவமனையில் புகார்
இதைத் தொடர்ந்து எலிகளை விரட்டி விட்டார். அப்போது பரமீந்தரின் கண்களை எலி கடித்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக மருத்துவமனை புகாரை மறுத்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட மருத்துவமனை
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் ராம் குப்தாவின் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல் கடந்த அக்டோபரில் கண்டிவேலியில் உள்ள டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் நகராட்சி பொது மருத்துவமனையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 68 வயது பெண்ணின் இடது கண்ணை எலி கடித்தது குறிப்பிடத்தக்கது. ஜோகேஸ்வரி மற்றும் கண்டிவேலியில் உள்ள அரசு மருத்துவமனைகளை மகாராஷ்டிர அரசு அண்மையில் புதுப்பித்தது குறிப்பிடத்தக்கது.