அமைச்சர் காலில் ஏறி கிலி ஏற்படுத்திய எலி... டெல்லி விமானம் 2 மணி நேரம் தாமதம்!
மும்பை: சுமார் நூறு பயணிகளுடன் புறப்பட்ட டெல்லி விமானம் ஒன்று சுண்டெலியை வெளியேற்றுவதற்காக மீண்டும் தரையிறங்கி, 2மணி நேரம் தாமதாமப் புறப்பட்டுச் சென்றுள்ளது.
அவுரங்காபாத் விமானநிலையத்தில் இருந்து மும்பை வழியாக டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் 100 பயணிகளுடன் புறப்பட தயாராக ஓடு தளத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் அம்மாநில வேலைவாய்ப்பு உறுதி திட்ட அமைச்சர் நிதின் ராவுட் பயணம் செய்தார்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது காலில் ஏதோ ஏறி இறங்குவதை உணர்ந்த நிதின், அது சுண்டெலி தான் எனக் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக இது குறித்து விமானிக்கு தகவல் அளித்துள்ளார்.
சுண்டெலியுடன் பயணம் செய்வது ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, உடனே விமானத்தை நிறுத்தியுள்ளார். உடனடியாக அனைத்து பயணிகளும் கிழே இறக்கி விடப்பட்டு, அனைத்து சரக்குகளும் இறக்கி வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து விமான நிலைய ஊழியர்கள் விமானத்தில் சுண்டெலியை தீவிரமாக தேடினர். ஆனால், சுண்டெலி அவர்களிடம் அகப்படவில்லை. அடுத்தகட்டமாக விமானத்தை செயற்கையாக சூடாக்கியதும், வெப்பம் தாங்காமல் சுண்டெலி விமானத்தை விட்டு இறங்கி ஓடியுள்ளது.
கிட்டத்தட்ட சுண்டெலியைப் பிடிக்கும் வேட்டை இரண்டு மணி நேரம் நடந்து முடிந்ததும், மீண்டும் பயணிகள் மற்றும் சரக்குகளுடன் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றுள்ளது.