ரயில்வே புதுப்பிப்புக்கான "காயகல்ப்" கவுன்சில் தலைவராக ரத்தன் டாடா
டெல்லி: ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள ரயில்வே புதுப்பிப்பு (காயகல்ப்) கவுன்சிலின் தலைவராக பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் அதிக அளவு பயன்படுத்தும் போக்குவரத்துச் சேவையான ரயில் சேவையை மேம்படுத்தும் வகையில் ரயில்வே புதுப்பிப்பு கவுன்சில் (காயகல்ப்) ஏற்படுத்தப்படும் என்று கடந்த மாதம் ரயில்வே பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது ரயில்வே புதுப்பிப்பு கவுன்சில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரத்தன் டாடா தலைமையிலான ரயில்வே புதுப்பிப்பு கவுன்சிலில் அகில இந்திய ரயில்வே பணியாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் சிவகோபால் மிஸ்ரா, இந்திய ரயில்வே பணியாளர் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.ரகுவய்யா ஆகியோர் நிரந்தர உறுப்பினர்களாக அங்கம் வகிப்பர்.
மேலும் பல உறுப்பினர்கள் இந்தக் கவுன்சிலில் விரைவில் சேர்க்கப்பட உள்ளனர்.