ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை- முதல் முறையாக பூரி சங்கராச்சாரியார் புறக்கணிப்பு!
புவனேஸ்வர்: ஒடிஷா பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை பலத்த பாதுகாப்புடன் நேற்று தொடங்கியது. ஆனால் இந்த ரத யாத்திரை நிகழ்ச்சியை பூரி சங்கராச்சாரியார் புறக்கணித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷா மாநிலம் பூரி நகரில் உள்ள ஜெகநாதர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. கி.பி. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக் கோவிலில் நடைபெறும் 9 நாள் ரதயாத்திரையை காண உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம்.
ரத யாத்திரை தொடக்கம்
ரத யாத்திரை தொடங்கியதையொட்டி நேற்று காலை ஜெகநாதருக்கு முறைப்படி பூஜைகள் நடத்திய பின்னர் கோவில் ஊழியர்கள் ஜெகநாதரை தங்களது தோள்களில் சுமந்து சென்று கோவிலுக்கு வெளியே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட தேரில் வைத்தனர்.
ஊர்வலம்
இதன் பின்னர் 16, 14, 12 ஆகிய சக்கரங்கள் கொண்ட பிரமாண்ட தேர்களில் முறையே பூரி ஜெகநாதர், பாலபத்ர சுவாமி, சுபத்திரா தேவியும் பலத்த பாதுகாப்புடன் தேரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முதல்வர் நவீன் பட்நாயக்
இந்த ரதயாத்திரை நிகழ்வுக்கு பிரதமர் நரேந்திரமோடியும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
சங்கராச்சாரியார் புறக்கணிப்பு
ஆனால் ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையை பூரி சங்கராச்சாரியார் ஸ்வாமி நிஸ்சலனந்தா சரஸ்வதி புறக்கணித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏற்கெனவே ஜெகநாதர் கோவில் நிர்வாகம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
ஏன் புறக்கணிப்பு?
அத்துடன் ஜெகநாதர் கோவில் ஊழியர்கள் 'ஆகம' விதிகளைக் கடைபிடிக்காமல் ரத யாத்திரயை நடத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதனாலேயே அவர் நேற்றைய ரத யாத்திரை தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
இந்து அமைப்புகள் எதிர்ப்பு
ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையை முதல் முறையாக பூரி சங்கராச்சாரியார் புறக்கணித்துள்ளார். அவரை ஒடிஷா மாநில அரசு சமாதானபடுத்தாதது ஏன் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து இயக்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளன.
மத்திய அமைச்சர்கள் சந்திப்பு
இதனிடையே இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணும் வகையில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜூயல் ஓரம் ஆகியோர் பூரி சங்கராச்சாரியாரை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.