ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும், முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஜெகன் எடுத்த ஆச்சர்ய முடிவுகள்
Recommended Video
அமராவதி: ஆந்திராவில் ரேஷன் பொருட்கள் பயனாளிகளின் வீடு தேடி வரும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார். இதேபோல் அரசு ஊழியர்களின் புதிய பென்ஷன் திட்டத்தையும் ரத்து செய்துள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூடத்தில் 25 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி செப்டம்பர் 1 தேதி முதல் ஆந்திராவில் ரேஷன் பொருட்கள் பயனாளிகளின் வீடு தேடி வரும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. கிராம தன்னார்வலர்கள் மூலம் கொண்டு சேர்க்கும் ரேஷன் பொருட்கள் வீடுகளில் கொண்டு சேர்க்கப்படும். அந்த பொருட்கள் அனைவரும் சாப்பிடும் வகையில் தரமான இருக்கும்.
கிராம தன்னார்வலர்கள்
இதற்காக கிராம, நகர மற்றும் மலைவாழ் கிராம பகுதிகளில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் 5 முதல் 15 கிலோ வரை பாக்கெட்டுகளாக ரேஷன் பொருட்களை வீடுகளில் சேர்ப்பார்கள். இதேபோல் கிராம தன்னார்வலர்கள் மூலம் அரசின் அனைத்து திட்டங்களும் மக்களிடம் சேர்க்கப்படும்.
இலவச மின்சாரம்
விவசாயிகளுக்கு 9 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளது. எந்த தேதியில் இருந்து என்பதை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின்பு தெரிவிக்கப்படும்.
நீதிபதிகள் குழு
அரசு ஒப்பந்தங்கள் அனைத்தையம் ஆலோசித்து முடிவு எடுப்பதற்கு நீதிபதிகள் தலைமையில் கமிஷன் அமைக்கப்படும். அந்த கமிஷன முன்னிலையில் அனைத்து ஒப்பந்தங்களும் பரிசீலிக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றப்படும். பின்னர் அந்த ஒப்பந்தங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை பெற்று அதன் பிறகே நீதிபதி கமிஷன் அரசுக்கு பரிந்துரை செய்யும். நீதிபதி குழுவின் பரிந்துரையை ஏற்றே ஒப்பந்தங்கள் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும்.
சஸ்பெண்ட்- பதவி பறிப்பு
இந்த இரண்டரை ஆண்டுகள் அமைச்சரவையில் செயல்படப்போகும் அமைச்சர்கள் யாராக இருந்தாலும் ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் வந்தால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.அவர்களின் கட்சி பதவியும் பறிக்கப்படும்.
ஆரோக்கியஸ்ரீ திட்டம்
ஆரோக்கியஸ்ரீ திட்டத்தில் கூடுதல் சிகிச்சைகள் பெறுவதற்கும், பரிசோதனைகள் செய்வதற்கும், வெளிமாநிலங்களில் சிகிச்சை பெறவும் அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல் அரசு ஊழியர்களின் புதிய பென்சன் திட்டமும் ரத்து செய்யப்படுகிறது.