சாக்லேட் என நினைத்து பட்டாசை சாப்பிட்ட 5 வயது சிறுமி பலி
மும்பை: மகாராஷ்டிராவில் சாக்லேட் என நினைத்து பட்டாசைச் சாப்பிட்ட 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி அருகே உள்ளது திசாங்கி கிராமம். இங்குள்ள மக்கள் தீபாவளியை பட்டாசுகள் வெடித்து கோலாகலமாகக் கொண்டாடினர். பின்னர் வெடிக்காத பட்டாசுகளை அங்குள்ள மைதானத்தில் சிலர் போட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று மதியம் அந்த மைதானத்தில் சிறுவர்- சிறுமிகள் விளையாடச் சென்றனர். அப்போது தாமினி என்ற 5 வயது சிறுமி வெடிக்காமல் வீசப்பட்டு கிடந்த பட்டாசுகளை பார்த்துள்ளார்.
அதில், வண்ணக் காகிதங்கள் சுற்றப்பட்ட பட்டாசுகள் சாக்லேட் போன்று தாமினிக்கு தெரிந்துள்ளது. உடனடியாக சாக்லேட் ஆசையில் அவற்றில் மூன்றை எடுத்து தாமினி சாப்பிட்டுள்ளார்.
பட்டாசை சாப்பிட்டதால் சிறிது நேரத்தில் அச்சிறுமிக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாமினி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.