மார்ச்சுவரியில் அகோரம்... பெண்ணின் சடலத்தைக் கடித்துக் குதறிய எலி... விசாரணைக்கு உத்தரவு
போபால்: மத்தியபிரதேசத்தில் பிணவறையில் வைக்கப் பட்டிருந்த பெண்ணின் சடலத்தை எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கொண்ட குழு விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உள்ளது பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கஸ்தூரிபா மருத்துவமனை. இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்த 68 வயது பெண்மணி ஒருவர் கடந்த சனிக்கிழமையன்று உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று இறுதி சடங்கு செய்வதற்காக அப்பெண்ணின் உடலை உறவினர்கள் பெற வந்தனர். அதனைத் தொடர்ந்து பிணவறையில் இருந்து அப்பெண்ணின் உடல் வெளியே கொண்டு வரப்பட்டது.
அப்போது அப்பெண்ணின் சடலத்தில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் அவர்கள் முறையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து பிணவறையில் வைத்து எலிகள் அந்த பென்ணின் உடலை கடித்தது வெளிச்சத்திற்கு வந்தது.
இது குறித்து அம்மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஏகே தேவ் கூறுகையில், "திங்களன்று பெண்மணியின் உடலை வெளியே எடுத்தபோது அவரது கழுத்து மற்றும் உடலின் பல பாகங்களிலும் காயங்கள் இருந்தது" என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கொண்ட குழு விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.