பஜ்ரங்தள் நிர்வாகி கொலை: கர்நாடக அமைச்சர்கள் இருவருக்கு நிழலுலக தாதா கொலை மிரட்டல்!
மங்களூர்: பஜ்ரங்தள் நிர்வாகியை கொலை செய்த கும்பலோடு, தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டி, கர்நாடகாவை சேர்ந்த இரு அமைச்சர்களுக்கு, நிழலுலக தாதா ரவி பூஜாரியிடமிருந்து தொலைபேசியில் கொலை மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின், மங்களூர், உடுப்பி உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள், இந்து-இஸ்லாமிய மதப்பிரிவினரிடையே மிகவும் கொந்தளிப்புள்ள பகுதிகள். இந்நிலையில், மங்களூர் அருகேயுள்ள மூட்பித்ரி என்ற பகுதியில், பஜ்ரங்தள் என்ற இந்து அமைப்பின் நிர்வாகி, பிரசாந்த் பூஜாரி கடந்த 9ம் தேதி ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
பசுக்களை சட்டவிரோதமாக வெட்டுவது மற்றும், கடத்திச் செல்வது போன்றவற்றுக்கு எதிராக பிரசாந்த் நடவடிக்கை எடுத்ததாகவும், எனவே கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர். இக்கொலைக்கு எதிராக பாஜக போராட்டங்கள் நடத்திய நிலையில், சில தினங்கள் முன்பு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் கைது நடவடிக்கையை தாமதப்படுத்தியதில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் சிலரின் நெருக்கடி உள்ளதாக பாஜக குற்றம்சாட்டியது. இந்நிலையில், மூட்பித்ரி சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏவும், இளைஞர் நலம் மற்றும் மீன்வளத்துறைக்கான அமைச்சருமான அபயச்சந்திர ஜெயினுக்கு மர்ம தொலைபேசி ஒன்று கடந்த 24ம் தேதி வந்துள்ளது.
மறுமுனையில் பேசிய நபர் தன்னை ரவிபூஜாரி என்று அறிமுகம் செய்துகொண்டதோடு, "பஜ்ரங்தள் நிர்வாகி கொலையில் உங்களுக்கும் தொடர்புள்ளது. இதற்காக உங்களை தீர்த்து கட்டுவேன்" என்று கூறியதாக தெரிகிறது. இதுபற்றி அமைச்சர் அபயசந்திரா ஜெயின் கூறுகையில், "எதிர்முனையில் பேசிய நபர் ஹிந்தியில் பேசினார். அவர் மிரட்டல்விடுத்ததும், சிறிது ஆடிப்போனேன். இருப்பினும், பேச்சை, போனில் ரெக்கார்ட் செய்தேன். அதை போலீசாரிடம் கொடுத்துள்ளேன்" என்றார்.
தாவூத் இப்ராஹிம் வரிசையில் ரவிபூஜாரியும் நிழலுலக தாதாவாகும். தாவூத்தை சிலர் முஸ்லிம்கள் பாதுகாவலராக பார்ப்பதைபோல, ரவிபூஜாரியை இந்துக்களின் பாதுகாவலராக சிலர் பார்க்கும்போக்கும் உள்ளது. மேலும், கொலையான பிரசாந்த் பூஜாரி மற்றும் ரவி பூஜாரி ஒரே ஜாதியினர் என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.
பிரசாந்த் பூஜாரி கொலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த முகமது ஷெரிப் தோடார் என்பவர் கடந்த மார்ச் மாதம், நடத்திய ரத்ததான முகாமில் அபய சந்திரா ஜெயின் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வனத்துறை அமைச்சர் ரமானத் ரை என்பவருக்கும் இதேபோன்ற மிரட்டல் அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இத்தகவலை உறுதி செய்ய அவர் மறுத்துவிட்டார். இருப்பினும், இரு அமைச்சர்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.