முத்தலாக் வரைமுறை செய்யப்பட வேண்டும்... ரவிசங்கர் பிரசாத் லோக்சபாவில் பேச்சு!
முத்தலாக் மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட இன்றைய நாள் வரலாற்றில் முக்கியமான நாள் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியுள்ளார்.
Recommended Video
டெல்லி : முத்தலாக் மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இன்றைய தினம் வரலாற்றில் சிறப்பான நாள், நீண்ட நாட்களாக வலியை சுமந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்களின் வலியை உணர்ந்து அவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் மதத்தில் 3 முறை அடுத்தடுத்து தலாக் சொன்னால் விவகாரத்து செய்துவிட்டதாக இருக்கும் நடைமுறைக்கு தண்டனை அளிக்கும் வகையிலான சட்ட மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அறிமுகம் செய்து வைத்து உறுப்பினர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், முத்தலாக் சட்டத்தை சில இஸ்லாமிய நாடுகளே வரைமுறைப்படுத்தி இருக்கும் போது, மதசார்பற்ற நாடான இந்தியாவில் ஏன் அதனை வரைமுறைப்படுத்தக் கூடாது.
முத்தலாக் வழக்கு விசாரணையின் போது சுமார் 100 வழக்குகள் வெளிச்சத்திற்கு வந்தன. இன்று காலையில் கூட ஒரு செய்தி படிக்க நேரிட்டது ராம்பூரில் ஒரு கணவன் அந்த பெண் காலையில் சீக்கிரம் எழவில்லை என்பதால் தலாக் சொன்னதாக அந்த செய்தி கூறுகிறது. முத்தலாக் சொன்னதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அடிப்படைஉரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டாமா என்பதை நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.
வரலாற்று சிறப்புமிக்க நாள்
ஷரியத்தில் நாம் தலையிட வில்லை, ஆனால் நீண்ட நாட்களாக வலிகளை சுமந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்களுக்கு இந்த மசோதா மூலம் நிம்மதி கிடைக்கும். முத்தலாக் முறையால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த மசோதா நிறைவேற்றப்படும் இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாளாக அமையும். எனவே எம்பிகள் இந்த மசோதாவை நிறைவேற்றித் தர முழு ஒத்தழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அடிப்படை உரிமைகளை பறிக்கும்
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியின் லோக்சபா தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்த சட்ட மசோதாவில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்தார். அரசியல் சாசனத்திறகு எதிராக சில அடிப்படை உரிமைகளை பறிக்கும் விஷயம் உள்ளது, பெண்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும்
ஆனால் இந்த மசோதாவை அவசர கதியில் நிறைவேற்ற நினைப்பது ஏன்? முத்தலாக் மசோதாவை நிலைக்குழுவிற்கு அனுப்பி அங்கு இதில் உள்ள குறைபாடுகளை கலைந்து, அனைவரின் கருத்துகளையும் கேட்டு அதற்கு ஏற்ப மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
அமைச்சர் உறுதி
மல்லிகார்ஜூனகார்கே கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர் ரவிசங்கர்பிரசாத், மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். அவரின் கருத்துக்கு ஏற்ப சட்டத்தில் என்ன மாற்றம் செய்ய முடியும் என்பது பரிசீலிக்கப்படும் என்றார்.