தெலுங்கானாவில் கூடுதலாக 2 மாவட்டங்கள் இணைப்பு?
ஹைதராபாத்: தெலுங்கானா புதிய மாநிலத்தில் கூடுதலாக 2 மாவட்டங்களை இணைத்து ராயல தெலுங்கானா என்று பெயர் சூட்டப்படக் கூடும் எனக் கூறப்படுகிறது.
தெலுங்கானா மாநிலத்தின் எல்லைகளை உருவாக்குவது தொடர்பாக தற்போது மத்திய அரசு ஆலோசனை நடத்திவருகிறது. புதியதாக அமைக்கப்படவுள்ள மாநிலத்தில் ராயலசீமா பகுதியில் உள்ள அனந்தப்பூர், கர்னூல் மாவட்டங்களை இணைக்க வேண்டும என்று வந்த கோரிக்கைகளை ஏற்று இரண்டு மாவட்டங்களையும் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்புதிய மாநிலத்தில் இரண்டு மாவட்டங்களை இணைத்து "ராயல தெலுங்கானா" என்ற பெயரில் மாநிலம் அமைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன்சிங் மற்றும காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இரண்டு மாவட்டங்களை இணைப்பதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் தலா 21 லோக்சபா தொகுதிகள் இருக்கும். இதற்கு வரும் நாளை மறுநாள் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தெலுங்கானா ஆதரவாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆதாயத்துக்காகவே இந்த இணைப்பு திட்டத்தை முன்வைப்பதாக பாரதிய ஜனதா, தெலுங்கு தேசம் ஆகியவை சாடியுள்ளன.