ரூ2,000 நோட்டில் ஜிபிஎஸ் சிப்? எல்லாமே கட்டுக்கதையாம்.. போட்டுடைக்கும் ரிசர்வ் வங்கி
ரூ2,000 நோட்டில் ஜிபிஎஸ் சிப் பொருத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் வதந்தி என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி: மத்திய அரசு புழக்கத்தில் வி இருக்கும் ரூ2,000 நோட்டில் ஜிபிஎஸ் சிப் பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை என்று ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பணம் பதுக்கலைத் தடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ரூ2,000 நோட்டில் ஜிபிஎஸ் சிப் பொருத்தப்பட்டிருப்பதாகவும் செயற்கைக் கோள் உதவியுடன் சிக்னல்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் எனவும் கூறப்பட்டது.
அத்துடன் பூமிக்கு கீழே 120 மீட்டர் ஆழத்தில் புதைத்தாலும் அந்த ஜிபிஎஸ் சிப் கருவிகள் சிக்னல்கள் மூலம் காட்டி கொடுத்துவிடும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் அப்லானா கில்லாவலாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், உலகில் எந்த ஒரு நாட்டிலும் இப்படியான ஒரு தொழில்நுட்பமே நடைமுறையில் இல்லை; அப்படியான நிலையில் நாம் மட்டும் எப்படி அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் புதிய ரூ2,000 நோட்டுகள் எப்படி பாதுகாப்பானவை என்பது குறித்து ரிசர்வ் வங்கி இணையதளத்திலேயே விரிவாக கூறப்பட்டுள்ளது எனவும் அவர் விளக்கம் அளித்தார்.
ரூ. 2,000 நோட்டில் ஜிபிஎஸ் சிப்? எல்லாமே கட்டுக்கதையாம்.. போட்டுடைக்கும் ரிசர்வ் வங்கி #RBI #rs2000 #Rs2000note #rumors pic.twitter.com/tmjj6etikm
— Oneindia Tamil (@thatsTamil) November 9, 2016