என்.ஆர்.ஐ-களுக்கு சிறப்பு சலுகை.. மார்ச் 31 வரை பழைய ரூ.500, 1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.
டெல்லி: அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அளிக்கப்பட்ட கால அவகாசத்தில் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை ரூபாய் நோட்டுககளை மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி வாய்ப்பு வழங்கியுள்ளது.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். மேலும் தங்களிடம் உள்ள அந்த மதிப்பிலான நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும், ரிசர்வ் வங்கி அலுவலகங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.
மேலும் அந்த நோட்டுகளை மாற்றுவதற்கு நவம்பர் 9-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்த இந்தியர்கள் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த இந்தியர்கள் ஆகியோர் நோட்டுகளை மாற்றிக் கொள்ள இயலாமல் போனது. ஆகவே அவர்களுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி வாய்ப்பு வழங்கியுள்ளது.