ரிசர்வ் வங்கி 200 ரூபாய் நோட்டை வெளியிடப் போகிறதாமே!
சிறு மதிப்பு நோட்டுக்களான 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்த அளவே புழக்கத்தில் உள்ளதால், 200 ரூபாய் நோட்டை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை: ரிசர்வ் வங்கி 200 ரூபாய் நோட்டை அச்சிட்டு புழக்கத்தில் விட உள்ளது. வரும் ஜூன் மாதத்தில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் 8 ஆம் தேதி, பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மக்கள் வங்கிகளின் வாசல்களில் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். கையில் உள்ள பணம் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியாலும் நீண்ட வரிசையில் காத்திருந்தபோதும் 100க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்.
எவ்வளவு கருப்புப் பணம் வசூலானது?
கருப்புப் பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டதாக மத்திய அரசு தெரிவித்த போதும் இதுவரை, வசூலான கருப்புப் பணம் குறித்து தகவல் வெளியிடவில்லை. அதுகுறித்து எந்த கட்சிகளும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சில்லறை மாற்றக் கஷ்டம்
பணமதிப்பிழப்பு அறிவிப்பை அடுத்து, புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. ஆனால், 2000 ரூபாய்க்கு சில்லறை மாற்றுவது இன்று வரை பெரிய பிரச்சனையாகவே உள்ளது. காரணம், 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இல்லை.
200 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு
இதனை உணர்ந்த ரிசர்வ் வங்கி, 200 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த உள்ளது. அதற்கான திட்டக் கூட்டம்ரிசர்வ் வங்கி போர்டு நடத்தியுள்ளது. அந்தக் கூட்டத்தில் வரும் ஜூன் மாதம் 200 ரூபாய் நோட்டை அச்சிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமைச்சரவை விரைவில் ஒப்புதல்
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக ரிசர்வ் வங்கி காத்துக்கொண்டுள்ளது. விரைவில் அதற்கான ஒப்புதல் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.