கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் விரைவில் வருகிறது புதிய 10 ரூபாய் நோட்டுகள்
பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய 10 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
மும்பை: ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா (ஆர்பிஐ) விரைவில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய 10 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விட இருக்கின்றது.
10 ரூபாய் நோட்டுகளில் தற்போது இருக்கும் பாதுகாப்பு வசதிகளுடன், கூடுதல் அம்சங்களையும் சேர்த்து விரைவில் புதிய நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
இதுகுறித்து ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில், மகாத்மா காந்தி-2005 வரிசையிலான இந்த நோட்டுகளில் இரு வரிசை எண் பகுதியிலும் ஆங்கில எழுத்து 'எல்' சேர்க்கப்படும். அச்சிடப்படும் ஆண்டான 2017, ரூபாய் நோட்டின் பின்பகுதியில் பொறிக்கப்படும்.
இந்தப் புதிய 10 ரூபாய் நோட்டு 2017-ம் ஆண்டு அச்சிடப்பட்ட நோட்டுகளாகக் குறிப்பிடப்பட்டு இருக்கும். மேலும் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமான பேனல்கள் ஏறுவரிசையில் அளவிலும் இருக்கும் அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளது. எனினும் முதல் 3 எண்களில் (எண் மற்றும் எழுத்து) எந்த மாறுதலும் இருக்காது.
இந்த நோட்டுகளில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலின் கையெழுத்தும் இடம் பெற்று இருக்கும். புதிய 10 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் அனைத்து விதமான 10 ரூபாய் நோட்டுகளும் சட்டப்படி செல்லும் எனவும் ரிசர்வ் வங்கி அந்த அறிக்கையில் கூறியுள்ளது.