வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் நீங்கின.. ஆனால் பணத் தட்டுப்பாடு இன்னும் சரியாகலையாம்!
வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
டெல்லி: வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8 ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இதன்மூலம் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அவர் புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளையும் அறிமுகப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது. புதிய ரூபாய் நோட்டு தட்டுப்பாடால் மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும் புதிய ரூபாய் நோட்டுகளை பெறவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
சில்லறைக்கு திண்டாடிய மக்கள்
இதனால் நாடுமுழுவதும் பெரும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் அன்றாட செலவுக்கே பணம் இல்லாம் அல்லாடினர். கிடைத்த 2000 ரூபாய் நோட்டுக்கும் சில்லறை கிடைக்காததால் மக்கள் பெரும் திண்டாட்டத்துக்கு ஆளாயினர்.
படிப்படியாக குறைக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
இதையடுத்து அதிகளவு 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் படிப்படியாக குறைக்கப்பட்டன.
உச்சவரம்பு அதிகரிப்பு
ரிசர்வ் வங்கி ஜனவரி மாதம் வெளியிட்ட அறிவிப்பில், பிப்ரவரி 20ம் தேதி முதல் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.24,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மார்ச் 13 ம் தேதியிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
கட்டுப்பாடுகள் நீக்கம்
இதனால் இன்று முதல் வங்கி மற்றும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்படுகின்றன. இருப்பினும் பணத்தட்டுப்பாடு முற்றிலுமாக சரியாக இன்னும் சில நாட்கள் ஆகும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.