ஆஹா வீட்டு கடன்.. வாகன கடன் வட்டி எல்லாம் இனி குறையும் .. ரெப்போ வட்டி குறைப்பால் நன்மைகள்
டெல்லி: வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. இதன் காரணமாக வீட்டு கடன், வாகன கடன் வட்டி குறையும் என்பதால் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை வரவேற்பை பெற்றுள்ளது.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துவிட்டதாக செய்திகளை படித்திருக்கும் பலரும் ஏன் அதை குறைக்கிறது. எந்த அடிப்படையில் குறைக்கிறது. இதனால் என்ன பயன் என்பது குறித்து கேள்வி எழுப்புவார்கள். அவர்களுக்காகவே ஒரு எளிய விளக்கம்.
நாட்டின் பொருளதாரத்தை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து பணப்புழகத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ வட்டி விகிதத்தை குறைப்பது கூட்டுவது என்ற நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுக்கும்.
மக்களுக்கு நன்மை
வட்டி விகிதம் குறைந்தால் மக்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.இதன் மூலம் மக்கள் ஆர்வமுடன் கடன் வாங்கி வீடு, பைக், கார் உள்ளிட்டவற்றை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் நாட்டில் பணப்புழக்கமும் அதிகரிக்கும். எனவே தான் வட்டி குறைப்பில் அதிக நன்மை உள்ளது.
உற்பத்தி அதிகரித்தால்
அதேநேரம் உற்பத்தி அதிகரித்து, வேலைவாய்ப்பு பெருகி, மக்களிடம் அதிக பணம் புழங்கினால் அந்த சமயத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும். இதை அப்படியே மற்ற வங்கிகளும் செய்யும்.
.25 சதவீதம் குறைப்பு
இந்நிலையில் மும்பையில் இன்று நடந்த ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்ட முடிவில் வட்டிக்குறைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கிகளின் குறுகிய காலக் கடன் வட்டி விகிதமான ரெப்போ 5.40 சதவிகிதமாக இருந்த நிலையில், அது 5.15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நான்கு நிதிக்கொள்கை கூட்டங்களிலும் மொத்தம் 1.15 சதவிகிதம் கடன் வட்டி குறைத்திருக்கிறது ரிசர்வ் வங்கி.
வீழ்ந்த துறைகள்
ஆனால் பெரிதாக வட்டிக்குறைப்பால் இதுவரை எந்த மாற்றமும் நடைபெறவில்லை. காரணம் நாட்டின் பொருளாதார மந்த நிலை காரணமாக, வளர்ச்சி விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. உற்பத்தி துறை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை, சிறுகுறு தொழில்கள் துறை, ஜவுளி, பின்னலாடை தொழில், கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இதை சரிசெய்ய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
வங்கி கடன் வாங்கணும்
நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவிகிதமாக இருக்கும் என்று ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 6.1 சதவிகிதமாக குறைத்து ரிசர்வ் வங்கி கணித்து வைத்திருக்கிறது. பொருளதாரம் வளர வேண்டுமெனில் மக்கள் பலரும் ஆர்வமுடன் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்க வேண்டும். அப்படி வாஙக பணம் வேண்டும். அதற்கு வங்கிகளில் கடன் வாங்கித்தான் மக்கள் வாங்குவார்கள். ஏனெனில் சாமானிய மக்களிடம் அந்த அளவுக்கு ரொக்க கையிருப்பு என்பதெல்லாம் இல்லவே இல்லை. எனவே அவர்களை கடன் வாங்க தூண்டும் வகையில் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் ரிசர்வ் வங்கி கடந்த 10 மாதங்களில் மொத்தமாக 1.35 சதவிகிதம் வட்டி குறைத்துள்ளது.
எளிய விளக்கம்
எளிய பாஷையில் சொல்வதென்றால் குறைந்த வட்டிக்கு கடன் கொடுத்து மக்களை தொழிலில் ஈடுபட செய்வது, பொருட்களை வாங்க செய்வது, உற்பத்தியை அதிகரிப்பது, மக்களின் வருவாயை அதிகரிப்பது, இதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிப்பது இதற்குத்தான் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரெப்போ விகிதத்தை அதாங்க வட்டி விகிதத்தை மாற்றி வருகிறது.