பலாத்கார செய்திகளை காட்டுவது டி.ஆர்.பிக்காகவாம்! கர்நாடக அமைச்சர் பேச்சுக்கு கண்டனம் வலுக்கிறது
பெங்களூரு: தொலைக்காட்சி செய்தி சேனல்கள் தங்களது டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக கர்நாடகாவில் நடக்கும் பலாத்கார சம்பவங்களை மிகைப்படுத்துவதாக இம்மாநில உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் குற்றம்சாட்டியதற்கு நாடு முழுவதிலும் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் வரத்தொடங்கியுள்ளன.
பெங்களூருவில் சிறு குழந்தைகள் பள்ளியில் பலாத்காரம் செய்யப்படுவது தொடர் கதையாகியுள்ளது. சமீபத்தில் பெங்களூருவில் வீடு புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பெண்ணை கணவன் கண் எதிரில் பலாத்காரம் செய்தனர். மேலும், ஷிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியில் இளம் பெண்ணை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து கொன்று வீசியது. பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணும், செய்த கும்பலும் வெவ்வேறு மதத்தவர்கள் என்பதால் அது மத கலவரமாக உருமாறிக்கொண்டு வருகிறது.
பாஜக போராட்டம்
எனவே திறமையற்ற உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் பதவி விலக வேண்டும் என கூறி பாஜக மகளிரணியினர் முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனிடையே நிருபர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ஜார்ஜ், பெங்களூருவை பலாத்கார நகரம் போல மீடியாக்கள் காண்பிக்கின்றன. தங்களது டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த பலாத்கார சம்பவங்களை தொலைக்காட்சி ஊடகங்கள் அதிகம் காண்பிக்கின்றன என்றார்.
பல தரப்பு கண்டனம்
அமைச்சரின் பேச்சுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெண்கள் நல போராளி அபாசிங் கூறுகையில், "பெண்களை காப்பாற்றுவதில் கர்நாடக அரசு முழு தோல்வியடைந்துள்ளது. அவர்கள் திறமையின்மையை மறைக்க மீடியாக்கள் மீது உள்துறை அமைச்சர் ஜார்ஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.
மீடியாக்களால் நன்மை
உண்மையை சொன்னால், பெண்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராக, மீடியா அளித்த விரிவான செய்திகளால்தான் பெண்கள் பாதுகாப்புக்கு மத்திய அரசு வலுவான சட்டம் கொண்டு வந்தது. இதற்காக மீடியாவை பாராட்டுவதைவிட்டுவிட்டு, குறை கூறுகிறார் கர்நாடக அமைச்சர். 2 வயது, 6 வயது, 8 வயது குழந்தைகளை பலாத்காரம் செய்வதை கட்டுப்படுத்த முடியாமல் உள்ள உள்துறை அமைச்சர் இப்படி பேசியுள்ளதில் வியப்பு இல்லை என்றார்.
பதவி பிரமாணத்துக்கு எதிரானது
கர்நாடக முன்னாள் மகளிர் ஆணைய தலைவி பிரமீளா நேசர்கி கூறுகையில், சட்டம் என்ன என்பது தெரியாமலும், தான் என்ன பேசுகிறோம் என்பது புரியாமலும் ஜார்ஜ் பேசியுள்ளார். இவர் பதவிக்கு வரும்போது எடுத்துக்கொண்ட பிரமாணத்திற்கு எதிராக நடந்து வருகிறார். நாட்டின் நான்காவது தூணான மீடியாக்களை, அமைச்சர் விமர்சனம் செய்வது என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றார்.
முன்னாள் அமைச்சர் கண்டனம்
கர்நாடக முன்னாள் உள்துறை அமைச்சர் (பாஜக) ஆர்.அசோக் கூறுகையில், ஜார்ஜுக்கு என்ன பேசுகிறோம் என்பதே தெரியவில்லை. உளறிக்கொட்டியுள்ளார் என்றார்.