சுனந்தா விவகாரம் தொடர்பாக எய்ம்ஸ் நடவடிக்கைகளை எதிர் கொள்ளத் தயார்... சுதிர் குப்தா அறிவிப்பு
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் பிரேத பரிசோதனை அறிக்கையை மாற்றித் தரும்படி தனக்கு நெருக்கடி தரப்பட்டதாக புகார் தெரிவித்த டாக்டர் சுதிர் குப்தா, எய்ம்ஸ் மருத்துவமனையில் எந்த வித நடவடிக்கைக்கும் தான் அஞ்சப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர். இவரது மனைவி சுனந்தா புஷ்கர். இவர் கடந்த ஜனவரி மாதம் தனது கணவருக்கும், பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் ஒருவருக்கும் முறையற்ற தொடர்பு இருப்பதாக டுவிட்டர் வலைதளப் பக்கத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே டெல்லியில் தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் சுனந்தா. தன் கணவரின் நடத்தை மீது புகார் கூறிய இரண்டே தினங்களில் உயிரிழந்ததால், சுனந்தாவின் மரணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
இது திட்டமிடப் பட்ட கொலை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். விஷம் மூலமாகவே சுனந்தாவின் உயிர் பிரிந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனபோதும், சுனந்தாவின் உடலில் இருந்த காயங்கள் சுனந்தாவின் மரணம் கொலையா, தற்கொலையா என்ற குழப்பத்தை மேலும் வலுவாக்கின. சுனந்தாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று சுனந்தா பிரேத பரிசோதனைக் குழுவின் தலைவராக இருந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் சுதிர்குப்தா, மத்திய சுகாதரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனிடம் புகார் கடிதம் ஒன்றை அளித்தார்.
அதில், "சுனந்தா புஷ்கர் மரணத்தை இயற்கையானது என்றுகூறி அறிக்கையளிக்குமாறு உயர் அதிகாரிகளால் நான் மிரட்டப்பட்டேன். இருப்பினும் நான் மிரட்டலுக்கு அஞ்சாமல், விஷம் மூலமாக சுனந்தா இறந்துள்ளார். அவராக விஷ மருந்து எடுத்துக்கொண்டும் இறந்திருக்கலாம், அல்லது, விஷம் அளித்து கொலையும் செய்யப்பட்டிருக்கலாம் என்று நான் அறிக்கையளித்தேன்" என்று சுதிர் குப்தா குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், சுதிர் குப்தாவின் குற்றச்சாட்டை எய்ம்ச் மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. மேலும், இப்பிரச்சினை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சுதிர் குப்தா மீது நடவடிக்கை எடுக்கப் படலாம் என தெரிவித்திருந்தது.
எய்ம்ஸ் மருத்துவமனையின் இந்தப் பதிலைத் தொடர்ந்து, ‘தான் மருத்துவ விதிமுறைகளின் படியே பிரேத பரிசோதனை அறிக்கை அளித்ததாகவும், அதில் எவ்வித மாறுபட்ட கருத்துக்கும் இடமில்லை எனத் தெரிவித்துள்ளார் சுதிர் குப்தா.
மேலும், சுனந்தா புஷ்கரின் பிரேத பரிசோதனை குறித்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் தமக்கு நெருக்கடி குடுத்ததாக தான் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை. தாம் அளித்த பிரேத பரிசோதனை அறிக்கை உறுதியானது. எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தம் மீது நடவடிக்கை எடுத்தால் அதற்காக தாம் அஞ்சப் போவதில்லை' என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே சுதிர் குப்தாவின் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.