அரசு வீட்டை காலி செய்யாமல் இழுத்தடிப்பு! மத்திய அரசுடன் மல்லுக் கட்டும் சிரஞ்சீவி!!
டெல்லி: அரசு ஒதுக்கீடு செய்த வீட்டை காலி செய்யாமல் மத்திய அரசுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சரான நடிகர் சிரஞ்சீவி.
முன்னாள் மத்திய அமைச்சர் சிரஞ்சீவிக்கு டெல்லியில் அரசு வீடு ஒதுக்கப்பட்டது. ஆனால் மத்தியில் ஆட்சி மாறிய பின்னரும் அரசு வீட்டை அவர் காலி செய்ய வில்லை. மேலும் 4 முன்னாள் அமைச்சர்களும் வீட்டை காலி செய்யாமல் இருக்கின்றனர்.
இதனால் முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிரஞ்சீவி, வயலார் ரவி, ராஜீவ் சுக்லா, கே.எச். முனியப்பா, அதிர்ரஞ்சன் சவுத்திரி ஆகியோருக்கு உடனடியாக வீட்டை காலி செய்யும்படி மத்திய அரசு நோட்டீசு அனுப்பியது.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய அமைச்சர்களுக்கு வீடு ஒதுக்க வேண்டியது இருப்பதால் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.
ஆனால் சிரஞ்சீவியோ மத்திய அரசுடன் இப்போது பஞ்சாயத்து பேசிக் கொண்டிருக்கிறார். மத்திய அரசின் நோட்டீசுக்கு பதிலளித்துள்ள சிரஞ்சீவி, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் புதிய வீடு ஒதுக்கும்படி சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு நானே கடிதம் எழுதினேன். இதையடுத்து அரசு டெல்லி துக்ளக் லேனில் ஒரு வீட்டை காட்டியது. ஆனால் அந்த வீட்டில் 3 ஆண்டு காலம் யாருமே வசிக்கவில்லை. வீடு ஒதுக்கும் விஷயத்தில் மத்திய அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது. நான் வீட்டை காலி செய்தால் எங்கே குடியிருப்பது என்பதை மத்திய அரசுதான் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
சிரஞ்சீவிகளுக்கு வீடு கிடைப்பதா கஷ்டம்?