பிரச்சனையே நீங்கள்தான்.. புயலாக கிளம்பும் குற்றச்சாட்டுகள்.. மகாராஷ்டிரா கலவரத்திற்கு யார் காரணம்?
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற ஜாதி கலவரத்திற்கு காரணம் யார் என்ற அரசியல் சண்டை உருவாகி இருக்கிறது.
Recommended Video
மும்பை: 200ம் ஆண்டு பீமா கோரேகான் போர் நினைவு தினம் தலித் அமைப்பினரால் ஜனவரி 1ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த நினைவு தினத்திற்குள் அத்துமீறி புகுந்த இந்துத்துவா அமைப்பினர் தலித் மக்களை சரமாரியாக தாக்கினார்கள்.
இதனால் உருவான கலவரத்தால் தலித் குழுவை சேர்ந்த ஒருவர் மரணம் அடைந்தார். இந்த மரணத்திற்கு பின் கலவரம் இன்னும் அதிகமானது. 2ம் தேதி காலை ஆரம்பித்த கலவரம் நேற்று இரவு வரை நடந்தது.
புனேயில் மட்டும் இல்லாமல் மும்பையிலும் கலவரம் தொடர்ந்து நடைபெற்றது. தற்போது இந்த கலவரத்திற்கு யார் காரணம் என்ற பிரச்சனை உருவாகி இருக்கிறது.
இந்துத்துவா குற்றச்சாட்டு
நாங்கள் எந்த விதமான தாக்குதலும் நடத்தவில்லை என்று இந்துத்துவா அமைப்பு கூறி இருக்கிறது. மேலும் இதற்கு முழுக்க முழுக்க தலித் அமைப்புகளே காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதேபோல் குஜராத் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளரான ஜிக்னேஷ் மேவானி மும்பையில் கடந்த மூன்று நாட்களாக தங்கி இந்த பிரச்சனையை உருவாக்கி இருக்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்துத்துவாதான் காரணம்
இந்த கலவரத்தை ஆரம்பித்தது 'ஹிந்து ஏக்தா' மற்றும் 'ஷிவ்ராஜ் பிரதிஸ்தான்' போன்ற அமைப்புகள்தான் என்று தலித் அமைப்புகள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு மிகவும் நெருக்கமான அமைப்புகள் ஆகும். இவர்கள்தான் கலவரத்தை தூண்டியது என அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கூறியுள்ளார்.
கல்வீச்சு
ஜிக்னேஷ் மேவனி மற்றும் பிரகாஷ் அம்பேத்கர் இதுகுறித்து கூறும் போது ''இந்துத்துவா அமைப்புகள் ஊரில் இருக்கும் உயர்சாதி மக்களை பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த மக்களை தூண்டிவிட்டு அவர்களை தாக்குதல் நடத்த வைத்து இருக்கிறார்கள். எங்களிடம் இதற்கான உள்ளூர் சாட்சிகள் நிறைய இருக்கிறது'' என்று கூறியிருக்கிறார்கள்.
நீதி விசாரணை
இந்த கலவரத்திற்கு இதுவரை யார் காரணம் என்ற வெளிப்படையான அறிவிப்பு அரசு மூலம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான பாஜக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதில் இரண்டு அமைப்பினரும் விசாரிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது.