"டம்ப் பண்ணிடுங்கோ"... இந்த கோர்ட் வேர்டை ஒழுங்கா பாலோ செய்திருந்தால் சரித்திரமே வேற!
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக்கு புலிகள் முதன் முதலில் பயன்படுத்திய கோர்ட் வேர்ட் "டம்ப் பண்ணிடுங்கோ" என்பதுதான்.... ஆனால் 1990-ம் ஆண்டே கிடைத்த இந்த கோர்ட் வேர்டை சரியாக கவனிக்க உளவுத்துறை தவறிவிட்டது என்று மூத்த பத்திரிகையாளர் நீனா கோபால் தம்முடைய ராஜிவ் கொலை தொடர்பான புத்தகத்தில் எழுதியுள்ளார்.
ராஜிவ்காந்தி கொல்லப்படும் முன்பாக அவரிடம் கடைசியாக பேட்டி எடுத்தவர் நீனா கோபால். ராஜிவ் காந்தி வெடித்து சிதறியபோது சில அடி தூரத்தில் நின்றிருந்தவர்...
தற்போது ராஜிவ் கொலை என்ற ஆங்கிலப் புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள்:
டம்ப் பண்ணிடுங்கோ
1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒருநாள்... நீலகிரியில் முகாமிட்டிருந்த விடுதலைப் புலி போராளிகளுக்கு இலங்கையில் இருந்து ஒயர்லெஸ் மெசேஜ் வருகிறது.. அதில், அவருண்ட மண்டையில் அடிபோடலாம்... டம்ப் பண்ணிடுங்கோ... மரணை வெச்சிடுங்கோ என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன.
ஒட்டுக்கேட்ட சித்தார்த்
விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 'டம்ப்' பண்ணிடுங்கோ என உரையாடினால் 'போட்டுத் தள்ளிடுவது' என்பது அர்த்தம். இந்த உரையாடலை இடைமறித்து கேட்டுக் கொண்டிருந்த பிளாட் இயக்கத் தலைவர் சித்தார்த்தன் தருமலிங்கம் ஆடிப் போகிறார்... உடனடியாக இலங்கையில் இருந்த இந்திய அமைதிப் படை உயர் அதிகாரியான கர்னல் ஹரிஹரனுக்கு இத்தகவலை சொல்கிறார்...
கண்டுகொள்ளாத எச்சரிக்கை
இருப்பினும் இந்த கோர்ட் வேர்ட் குறித்து தொடர்ந்து ஆராயாமல் விட்டுவிட்டனர் உளவுத்துறை. இது குறித்து ராஜிவ் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்காக 'ரா' தலைவராக இருந்த சந்திரன் கூறுகையில், அப்போது மத்தியில் ராஜிவ் ஆட்சியில் இல்லாத சூழல்... நாங்கள் எதை சொன்னாலும் யாரும் கேட்பதாக இல்லை. நாம் விடுதலைப் புலிகளின் சிக்னல்களை சரியாக ஆராய்ந்திருந்தால் பிரபாகரனின் மனநிலை என்ன என்பதை புரிந்திருக்க முடியும். நிச்சயம் ராஜிவ் காந்தி கொலையைத் தடுத்திருக்கவும் முடியும். இது நம்முடைய மிகப் பெரிய தவறு. நாம்தான் ராஜிவ்காந்தியை பாதுகாக்க தவறிவிட்டோம் என்கிறார்.
இன்னமும் நினைவில்...
இப்போதும்கூட கர்னல் ஹரிஹரனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.யாகிவிட்ட சித்தார்த்தனும் இதனை நினைவில் வைத்திருக்கின்றனர்... அப்போதே இதை நாம் சீரியசாக கவனித்திருந்தால் சரித்திரமே வேறு மாதிரி போயிருக்கும் என்கின்றனர் இருவரும்...'
பேபி சுப்பிரமணியம்...
மேலும் சித்தார்த்தன் தருமலிங்கம் கூறுகையில், பேபி சுப்பிரமணியம்... தமிழக அரசியல் தலைவர்களுக்கு மிக நெருக்கமானவர்... அந்த கோர்ட்வேர்டானது பிரபாகரனிடம் இருந்து பேபி சுப்பிரமணியனுக்குத்தான் போயிருக்க வேண்டும்.. பிரபாகரன் சார்பில் பொட்டு அம்மானோ, அகிலாவோ பேசியிருக்கலாம். ராஜிவ்காந்தி கொலைச் சதியை முழுமையாக திட்டமிட்டு நிறைவேற்றியதில் பேபி சுப்பிரமணியத்துக்கும் பங்கிருக்கிறது என்கிறார்.
ஜெர்மனி எச்சரிக்கை
அதேபோல் ரா தலைவராக இருந்த பி ராமன் கூறுகையில், ஜெர்மனி உளவுத்துறையிடம் இருந்து அப்போது எங்களுக்கு ஒரு எச்சரிக்கை வந்தது... வெடிபொருட்களை தயாரிப்பதில் வல்லுநரும் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளருமான ஒருவர் அடிக்கடி சென்னைக்கு வந்து செல்கிறார் என்பதுதான் அந்த எச்சரிக்கை. ஆனால் மத்திய உளவுத்துறை இதை கண்டுகொள்ளவே இல்லை. அவர்களைப் பொறுத்தவரை ஈழத் தமிழர்கள் ஒன்றும் வெடிபொருட்கள் தயாரிப்பதில் வல்லுநர் கிடையாது என்று கண்ணைமூடிக்கொண்டு பேசினார்கள்... அந்த நபர் சென்னையில் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை கண்காணித்திருந்தாலே போதும் என்கிறார்.