ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் அடுத்தது ஜேட்லி... நிதி அமைச்சர் பதவிக்காக 'ரூட்' போடும் சாமி!
டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனைத் தொடர்ந்து தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பதவிக்கு வேட்டு வைப்பதில் மும்முரமாக இருக்கிறார் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி. ஆனால் உண்மையில் நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை அகற்றிவிட்டு அந்த பதவியில் தாம் அமரவேண்டும் என்பதுதான் சுப்பிரமணியன் சுவாமியின் இலக்கு என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ரகுராம் ராஜன் என முதலில் கொளுத்திப் போட்டவர் சுப்பிரமணியன் சுவாமிதான். அவர் மனதளவில் இந்தியராக இல்லாமல் அமெரிக்கா நாட்டு குடிமகனாக இருக்கிறார் என்றெல்லாம் விமர்சனம் வைத்து பிரதமர் மோடிக்கு கடிதம் மேல் கடிதங்களை எழுதினார் சு.சுவாமி.
இதற்கு ஒரு முடிவாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் தாம் 2-வது முறையாக நீடிக்க விரும்பவில்லை என ரகுராம் ராஜன் அறிவிக்க சு.சுவாமிக்கு ஒரே கொண்டாட்டம்... ஆனால் நாட்டின் பொருளாதார வல்லுநர்களோ அதிர்ச்சியையும் அதிருப்தியையும்தான் வெளிப்படுத்தினர்.
அரவிந்த் சுப்ரமண்யன்
இந்த நிலையில் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனை அடுத்த இலக்காக வைத்து அவரை நீக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி வருகிறார் சு.சுவாமி. அவரையும் அமெரிக்கா சார்பானவர் என்றே முத்திரை குத்தி வருகிறார்...
நிதி அமைச்சர் பதவி
ஆனால் உண்மையில் சு.சுவாமியின் இலக்கு நிதி அமைச்சர் அருண்ஜேட்லிதான் என்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த போது தமக்கு முக்கியமான அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார் சுப்பிரமணியன் சுவாமி. ஆனால் பாஜக மேலிடம் அவரை கண்டுகொள்ளாமல் ஒதுக்கியே வைத்திருந்தது.
ராஜ்யசபா எம்.பி.
இருந்த போதும் ஏதாவது ஒரு பிரச்சனையை முன்வைத்து குடைச்சல் கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார் சு.சுவாமி. இந்த நிலையில் அவர் ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டதுதான் தாமதம்... எப்படியாவது நிதி அமைச்சர் பதவியை கைப்பற்றிவிடுவது என்பதில் குறியாக இருக்கிறார்...
தாராளமய பொருளாதார கொள்கை
இதனால்தான் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் போன்றோரை இலக்கு வைத்து தாக்கி வருகிறாராம்.. சந்திரசேகர் ஆட்சிக் காலத்தில் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராகவும் சட்டத்துறையை கூடுதல் பொறுப்பாகவும் வகித்தவர் சுப்பிரமணியன் சுவாமி. 1991-ல் பிரதமராக நரசிம்மராவ் இருந்த போது தாராளமயமாக்கல் பொருளாதார கொள்கையை அமல்படுத்தப்பட்டது. இதற்கு 1990-91-ல் அடித்தளம் போட்டவர் சுப்பிரமணியன் சுவாமிதான். பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான இவர் கொடுத்த அறிக்கையைத்தான் பின்னாளில் நரசிம்மராவ் அரசு செயல்படுத்தியது.
அருண்ஜேட்லி
தற்போதும் தம் வசம் நிதித்துறை அமைச்சகத்தை எப்படியாவது கொண்டு வரும் நோக்கத்திலேயே ஒவ்வொரு விக்கெட்டாக வீழ்த்தி வருகிறார் சு.சுவாமி. இதனால் சுப்பிரமணியன் சுவாமி ஏவப் போகும் அடுத்த அஸ்திரத்தின் இலக்கு அருண்ஜேட்லிதான் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.