பெங்களூரில் வாங்க ஆள் இல்லாத 60,000 வீடுகள்...: கவலையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள்
பெங்களூர்: வில்லாக்கள், அபார்ட்மென்ட்கள், ரோ வீடுகள் என கிட்டத்தட்ட 1.82லட்சம் வீடுகளை கட்டி வைத்தும், அதில் கிட்டத்தட்ட 60,000 வீடுகளை விற்க முடியாமல் தவித்து வருகிறார்களாம் பெங்களூர் ரியல் எஸ்டேட் அதிபர்கள்.
இவற்றில் 80 சதவீதம் அபார்ட்மென்ட்கள் ஆகும். பத்து சதவீதம் பிளாட்டுகள் ஆகும்.
பெங்களூரில் தற்போதைய நிலையில் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட குடியிருப்புத் திட்டங்கள் ஜரூராக மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். ஆனால் கட்டியவற்றை வாங்கத்தான் ஆளில்லை என்கிறார்கள்.
விற்பனைச் சரிவு...
2012ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மாதத்திற்கு 3774 வீடுகள் வரை பெங்களூரில் விற்று வந்ததாம். ஆனால் தற்போது அதில் சரிவு ஏற்பட்டுள்ளது.
16 மாதங்களாகும்....
தற்போது தேக்கமடைந்துள்ள வீடுகளை முழுமையாக விற்க இன்னும் 16 மாதங்களாகுமாம்.
விலை உயர்த்தப்படவில்லை...
இதுகுறித்து மார்ஸ் ரியாலிட்டி அதிபர் பிரசாந்த் சம்பர்கி கூறுகையில் கடந்த இரண்டு காலாண்டுகளாக விலையில் மாற்றம் இல்லை. அப்படியேதான் இருக்கிறது. தற்போதைய பொருளாதார மந்த நிலையைக் கருத்தில் கொண்டு விலை உயர்த்தப்படாமல்தான் உள்ளது. இருப்பினும் வாங்குவோர் எண்ணிக்கை கூடவில்லை என்றார்.
மலிவான ரியல் எஸ்டேட் சந்தை....
சில்வர்லைன் குரூப் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பரூக் மகமூத் கூறுகையில்,வீட்டுக் குடியிருப்புகளின் விலை கூடாமல் இருந்தும் கூட விற்பனை பெரிதாக இல்லை. தேக்கமடைந்துள்ளது. இருப்பினும் பெங்களூர்தான் நாட்டிலேயே மிகவும் மலிவான ரியல் எஸ்டேட் சந்தையாக திகழ்கிறது. இங்கு நல்ல தரமான வீடுகள் கிடைக்கும் என்பது இதற்கு காரணம் என்றார்.
3 சதவீத விலை உயர்வு...
பெங்களூரில் 2012 டிசம்பர் மாத வாக்கில் இருந்ததை விட ஒரு 2 பெட்ரூம் அல்லது 3 பெட்ரூம் அபார்ட்மென்ட்டின் விலை 3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதாம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு சதுர அடி ரூ. 4432 ஆக இருந்தது. இது கடந்த ஜூன் மாதம் ரூ. 4556 ஆக ஆக உயர்ந்துள்ளது.
சதுர அடி ரூ 7,500 முதல்...
தற்போது பெங்களூரில் குடியேறத் தயாராக உள்ள 600க்கும் மேற்பட்ட வீடுகளின் விலை சதுர அடி ரூ. 7500 முதல் 10,000 உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 3000 சதுர அடிக்கும் மேலான பரப்பளவு கொண்ட அபார்ட்மென்ட்கள் விற்காமல் இருக்கிறதாம்.
ரியல் எஸ்டேட் அதிபர்கள் கவலை....
தற்போது ரூபாய் மதிப்பு குறைந்திருப்பதால் பல என்ஆர்ஐகள் பெருமளவில் வீடு வாங்க குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்காததால் பெங்களூர் ரியல் எஸ்டேட் அதிபர்கள் கவலையில் உள்ளனராம்.