சட்டீஸ்கரில் மாஸ் காட்டிய காங்கிரஸ்... பாஜக சரிவுக்கு காரணம் இது தான்!
Recommended Video
ராய்பூர்: சட்டீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு காரணம் பாஜக காட்டிய அலட்சியம் என கூறப்படுகிறது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் 68 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. 15 தொகுதிகளை பாஜக பெற்றுள்ளது. 2 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சி, 5 இடங்களில் ஜனதா காங்கிரஸ் சட்டீஸ்கர் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் 68 இடங்களை பெற்று, தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதனால், 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வந்ததை காங்கிரஸ் தட்டி பறித்துள்ளது.
காரணங்கள் என்ன?
15 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்த பாஜகவுக்கு எதிராக மக்களின் மனநிலையை எதிர்க்கட்சிகள் மாற்றியது. தொடர்ந்து மூன்று முறை ஆட்சி கட்டிலில் இருந்தும் சொல்லும் படி எந்த சாதனையையும் பாஜக செய்யவில்லை. முதல்வர் ரமன் சிங் ஓரளவுக்கு நல்லது செய்துள்ளார் என்றாலும், அவர் செய்த நல்ல விஷயங்களை மக்கள் மறந்து விட்டனர். ஆளும் கட்சி செய்த தவறுகளை எதிர்க்கட்சிகள் குறை சொல்லி மக்கள் மனநிலையை மாற்றியதே முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
கட்சியில் பிளவு
காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜித் யோகியால் பெரும் பாதிப்பு இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் அதுவே காங்கிரஸ் கட்சிக்கு பலமாக அமைந்து விட்டது. காங்கிஸ் கட்சியின் மாநில தலைவராக இருந்த அஜித் யோகி, பிரித்தாளும் வேலையை செய்ததால் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி நிலவி வந்தது. இதனால், ஒற்றுமை இல்லாமல் காங்கிரஸ் பின்னோக்கி சென்று கொண்டிருந்தது. அஜித் யோகி காங்கிரசில் இருந்து விலகி ஜனதா காங்கிரஸ் சட்டீஸ்கர் என்ற கட்சியை தொடங்கினார். இது காங்கிரசிற்கு சாதகமாக அமைந்தது. காங்கிரசில் மீண்டும் ஒற்றுமை ஏற்பட ஏற்கனவே அக்கட்சிக்கு இருந்த வாக்கு வங்கி பெரிய வெற்றியை பெற்று தந்துள்ளது.
நக்சல் பிரச்சனை
நாட்டிலேயே நக்சல் பிரச்சனை அதிகம் உள்ள மாநிலம் சட்டீஸ்கர் தான். ஒவ்வொரு தேர்தலிலும் மாவோயிஸ்ட்கள் தலையீடு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தன. அந்த வகையில், தேர்தல் நேரத்தில் 6 தாக்குதல்களை நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் நக்சல் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் போனது பாஜகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு பிரச்னை
சட்டீஸ்கர் மாநிலத்தில் 40 சதவீதத்திற்கும் மேல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். அதே நேரம் வேலைவாய்ப்பு இன்மையால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டனர். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட சட்டீஸ்கர் மாநிலத்தில் முன்னேற்றம் ஏற்பட எந்த திட்டங்களும் இல்லாததும் காங்கிரஸ் வெற்றிக்கு காரணமாக அமைந்து விட்டது.