கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற காரணம் இதுதான்!
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக வெற்றிக்கு காரணம் என்ன என்ற கணிப்பில் அரசியல் விமர்சகர்கள் இறங்கியுள்ளனர்.
தென் இந்தியாவில் முதல் முறையாக பாஜக 2008ல் ஆட்சிக்கு வந்தது. அப்போது எடியூரப்பாவுக்கு ஆதரவாக ஒரு அலை வீசியது.
சொன்னபடி 20 மாதங்கள் கழித்து ஆட்சியை எடியூரப்பாவுக்கு மதசார்பற்ற ஜனதாதளம் கொடுக்கவில்லையே என்பதால், தனக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டுவிட்டதாக எடியூரப்பா செய்த பிரச்சாரத்திற்கு ஆதரவான அலை அது.
எடியூரப்பா தனிக்கட்சி
ஆனால், 2013ல் கர்நாடக ஜனதா கட்சி என தனிக் கட்சி உருவாக்கி எடியூரப்பா போட்டியிட்டார். ஏனெனில் அவருக்கும் பாஜகவுக்கும் அப்போது முறிவு ஏற்பட்டுவிட்டது. இதனால், வெறும் 40 தொகுதிகளில் பாஜக வெல்ல முடிந்தது. வாக்குகளை பிரித்து பாஜகவை தோற்க வைத்த கர்நாடக ஜனதா கட்சி 6 தொகுதிகளில் வென்றது.
சித்தராமையா ராஜதந்திரம்
கடந்த 5 வருட காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் சித்தராமையா பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்தார். அம்மா உணவகம் மாதிரி இந்திரா கேண்டீன் கொண்டு வந்தது, கன்னடத்தை முன்னிறுத்தியது, கர்நாடக கொடி இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகளை தமிழகம் பாணியில் மேற்கொண்டார். மறுபக்கம் எடியூரப்பாவோ, கட்சி பணிகளில்தான் ஈடுபட முடிந்தது.
எடியூரப்பா அலை இல்லை
இந்த தேர்தலில் எடியூரப்பா ஆதரவு அலை என்ற ஒன்று இல்லை. மோடி அலையும் குறைந்தபடி இருந்தது. 4 வருட காலத்தில் நடுத்தர மக்களுக்கு மோடி அரசு எந்த பெரிய நன்மையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்தது. இவையெல்லாம் காங்கிரசுக்கு சாதகம் என கருதப்பட்ட நிலையில், பாஜகவோ தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளது.
மோடி பிரச்சாரம்
இதுகுறித்து அரசியல் விமர்சகர்களிடம் கேட்டபோது, "மோடி வருகைக்கு பிறகு கர்நாடக களம் மாறியது. மே 1 முதல் 15 இடங்களில்தான் மோடி பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பாஜக ஆதரவு அலை இல்லாத நிலையில், மோடியை மட்டுமே நம்ப வேண்டியிருந்ததால் 21 இடங்களாக அவை விரிவுபடுத்தப்பட்டன. மோடியின் உரை நிகழ்த்திய தாக்கத்தை பிறகு பாஜகவினரால் உணர முடிந்தது" என்கிறார்.
சமூக வலைத்தள தாக்கம்
கர்நாடகாவில் இளம் வாக்காளர்கள் கணிசமாக வாக்களித்துள்ளனர். இவர்கள் இன்னும் கூட மோடியை நம்புகிறார்கள். இதற்கு காரணம், சோஷியல் மீடியாவின் தாக்கம்தான். மோடி எது செய்தாலும் அது வருங்காலத்தில் நாட்டுக்கு நல்லது செய்யும் என்ற நம்பிக்கையை இந்த இளைஞர்கள் வைத்துள்ளனர். மேலும், லிங்காயத்துகளை தனி மதமாக அறிவித்ததும் காங்கிரசுக்கு எதிராக போயுள்ளது.
ஓட்டுகளை விழுங்கிய ஜேடிஎஸ்
மும்முனைபோட்டி இம்முறை காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம், பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் வாக்குகளைத்தான் சாப்பிட்டுள்ளது. இதனால் மஜத குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற முடிந்துள்ளது. அது காங்கிரசுக்கு ஏறத்தாழ ஈடாக பல தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஆட்சி ராசி
1983க்கு பிறகு கர்நாடகாவில் ஒரே கட்சி தொடர்ச்சியாக இருமுறை ஆட்சியை பிடித்தது இல்லை. அதே நிலை இப்போதும் தொடருகிறது. அந்த நிலையை தான் மாற்றுவேன் என சித்தராமையா கூறியிருந்தாலும், அப்படி நடக்கவில்லை என்பதே நிதர்சனம்.
அமித்ஷா வியூகம்
கர்நாடக பாஜகவினர் சிறப்பாக ஃபீல்டு ஒர்க் செய்துள்ளனர். அந்த அளவுக்கு காங்கிரஸ் செய்யவில்லை. காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசல் இதற்கு காரணம். பாஜக தலைவர் அமித்ஷா பல மாதங்களாக பெங்களூரிலேயே வீடு எடுத்து தங்கி தேர்தல் களப்பணியை மேற்பார்வையிட்டார். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, தேர்தல் நேரத்தில்தான் பிரச்சாரத்திற்காக வந்தார். அவரது பிரச்சாரமும், மோடி பேச்சு போல வாக்காளர்களை ஈர்க்கவில்லை.