ஆப்கானில் நிலைமை மோசம்.. பன்னாட்டுப் படைகள் வெளியேற வேண்டாம்: சொல்வது இந்தியா
டெல்லி: ஆப்கானில் நாடாளுமன்றம் மீதான தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து பன்னாட்டுப் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து சர்வதேச நாடுகள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்றம் மீது தலிபான் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தியிருந்தனர். இத்தாக்குதலை நடத்திய 6 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் ஆப்கானில் தாக்குதல் நடைபெற்ற சில மணிநேரங்களில் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி அசோக் குமார் முகர்ஜி கூறியதாவது:
ஆப்கானிஸ்தானின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் இருந்து பன்னாட்டுப் படைகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளும் முடிவை சர்வதேச நாடுகள் மறுபரீசிலனை செய்ய வேண்டிய தருணம் இது.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஆப்கானில் மோதல்கள் 45% அதிகரித்துள்ளது; வன்முறைகள் 71% அதிகரித்துள்ளதாக ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அசோக்குமார் முகர்ஜி கூறியுள்ளார்.
ஆப்கானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டு தீவிரவாதிகளை ஒடுக்கி வந்தன. கடந்த ஆண்டுடன் இந்த படைகளில் பெரும்பாலானவை ஆப்கானை விட்டு வெளியேறி உள்ளன. சுமார் 12 ஆயிரம் பன்னாட்டுப் படையினர் தொடர்ந்தும் ஆப்கான் ராணுவத்துக்கு உதவி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.