ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மீட்கப்பட்டு உயிரிழந்த 3 வயது குழந்தை!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டும் காப்பாற்ற முடியாமல் பலியான சம்பவம் பெரும் பரிதாபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் நிகாஜ் என்ற கிராமத்தில் உள்ள வயல்வெளியில் ஒரு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு அது சரிவர மூடப்படாமல் இருந்தது. நேற்று இந்த ஆழதுளை கிணற்றுக்கு அருகே பிரியன்ஷு என்ற 3 வயது ஆண் குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை பிரியன்ஷு ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது.
100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 46 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி கொண்டது. சம்பவம் நடந்த போது குழந்தையின் பெற்றோர் அருகில் இருந்ததால் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ஆகியோர் இணைந்து குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பின் இன்று அதிகாலை 2 மணியளவில் குழந்தையை உயிருடன் மீட்டனர். இதையடுத்து உடனடியாக குழந்தையை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து குழந்தை கொண்டு செல்லப்பட்ட மருத்துவமனை 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.