கேரளத்தில் மீண்டும் ரெட் அலர்ட்... 3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்!.. மூணாறுக்கு வரவேண்டாம்!
திருவனந்தபுரம்: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மூணாறு உள்ளிட்ட மலை பாங்கான பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதனால் ஒரு வாரத்துக்கு நல்ல மழை பெய்தது.
இந்த மழையால் மாநிலத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. இதனால் 14 மாவட்டங்களும் நீரில் தத்தளித்தன. 100 ஆண்டுகளில் இல்லாத மழை ஒரு வாரத்தில் பெய்ததால் மக்கள் வீடுகளை இழந்தனர்.
[ சென்னையில் பின்னி பெடலெடுக்கும் மழை... சாலைகளில் தேங்கிய மழை நீர்! ].
வீடுகளின்றி தவித்த மக்கள்
மழை மற்றும் நிலச்சரிவால் வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். தண்ணீர் போக வழியில்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பலி எண்ணிக்கை
நிலச்சரிவு மற்றும் மழையில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். மொத்தம் ரூ 4000-க்கும் கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக அரசு அறிவித்தது.
3 நாட்களுக்கு
இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மீண்டும் மிக மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இடுக்கி, திரிசூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூணாறுக்கு வரவேண்டாம்
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மலை பாங்கான இடம்
மூணாறில் உள்ள நீலக்குறிஞ்சி பூக்களை பார்க்க சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம், அதுபோல் மலைபாங்கான பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார். இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.