செம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் மேலும் 10 தமிழர்கள் கைது
ரேணிகுண்டா: திருப்பதி அருகே இருவேறு இடங்களில் செம்மரம் வெட்டிக் கடத்த முயன்றதாக தமிழக தொழிலாளர்கள் 10 பேரை ஆந்திரா போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேயுள்ள சேஷாச்சலம் வனப்பகுதிகளில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, செம்மரங்களை வெட்டிக் கடத்த முயன்றதாக 9 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 27 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல, ரங்கம்பேட்டை வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸார், செம்மரம் கடத்த முயன்றதாக ஒருவரை கைது செய்தனர்.
முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதியன்று ஆந்திர மாநிலம் திருப்பதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் செம்மரம் கடத்தச் சென்றார்கள் எனகூறி, செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 20 அப்பாவி தொழிலாளர்கள் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.