ஆந்திராவில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் - 3 பேர் கைது
ரேணிகுண்டா: ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா அருகே லாரியில் கடத்தப்பட்ட ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள செம்மரங்களை சிறப்பு அதிரடிப்படையினர் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து தினமும் செம்மரங்கள் வெட்டி பிற மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் கடத்தப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில், வனத்துறை மற்றும் காவல் துறையினரை உள்ளடக்கிய அதிரடிப்படையை ஆந்திர அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் ரேணிகுண்டா அருகே செம்மரக் கடத்தல் கும்பல் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளது. காளஹஸ்தி ஏர்ப்பேடு அருகே அதிரடிப்படை காவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது லாரி ஒன்று நிற்காமல் சென்றது.
லாரியில் சிக்கி காவலர் ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து அதிரடிப்படையினர் அந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். லாரியை சோதனையிட்ட போது அதில் 32 செம்மரக் கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியில் கடத்தப்பட்ட செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. லாரி டிரைவர் உட்பட 3 பேர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள செம்மரக் கட்டைகளின் மதிப்பு ரூ.30 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.