"ஆசிட்" குண்டுகளுடன் வலம் வரும் செம்மரக் கடத்தல்காரர்கள்... சொல்கிறது ஆந்திர போலீஸ்
சித்தூர்: தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே செயல்பட்டு வரும் செம்மரக்கடத்தல்காரர்கள் ஆசிட் அடைத்த பாட்டில்களுடன் உலா வருவதாக ஆந்திர போலீஸார் கூறியுள்ளனர்.
செம்மரக் கடத்தல்காரர்களிடமிருந்து ஆசிட் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். போலீஸார் என்கவுண்டரில் ஈடுபட்டால் அவர்கள் மீது இதை வீச அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் போலீஸ் கூறுகிறது.
ஆந்திர போலீஸார் இந்த ஆசிட் பாட்டில்களை ஆசிட் குண்டு என்று வர்ணிக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 12 செம்மரக் கடத்தல்காரர்களை ஆந்திர போலீஸார் கைது செய்தபோது அவர்களிடமிருந்து இந்த ஆசிட் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டனவாம். இதுதொடர்பாக சித்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஒவ்வொருவரிடமும் ஆசிட் பாட்டில்
போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, போலீஸார் உங்களைத் தாக்க வந்தால் இதை அவர்கள் மீது வீசுமாறு அவர்களை அனுப்பியவர்கள் அறிவுறுத்தியுள்ளனராம். ஒவ்வொருவரிடமும் ஆசிட் பாட்டில்கள் இருந்ததையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனராம்.
கண்டிப்பாக கொண்டு போக வேண்டும்
செம்மரக் கடத்தலில் ஈடுபடுவோர் கண்டிப்பாக ஆசிட் பாட்டில்களை கொண்டு போக வேண்டும் என அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். தயங்காமல் போலீஸ் மீது ஆசிட் ஊற்றி விடுங்கள் என்று அவர்களை அனுப்பி வைத்த முதலாளிகள் கூறியுள்ளனராம்.
கற்களும்
ஆசிட் பாட்டில்கள் தவிர பெரிய பெரிய கருங்கற்களையும் இவர்கள் பைகளில் வைத்திருந்தனராம். போலீஸார் மீது எறிவதற்காக இதைக் கொண்டு வந்திருந்தனராம்.
ஆக்ரோஷம்
ஆந்திர போலீஸார் மேலும் கூறுகையில், தற்போது கடத்தல்காரர்கள் மேலும் ஆக்ரோஷமாக மாறி வருகின்றனர் என்பதையே இது காட்டுகிறது. இதற்கேற்றார் போல நாங்களும் ஆயத்த நிலையில் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது என்றனர்.
முக்கியப் புள்ளி மோகன்
கைது செய்யப்பட்ட 12 பேரில் மோகன் என்பவர் முக்கியமானவராம். இவரை கடந்த 2012 முதல் ஆந்திர போலீஸார் தேடி வருகின்றனராம். இவர் மட்டும் 100 டன் செம்மரக் கட்டைகளை கடந்த 2012 முதல் கடத்தியுள்ளதாக போலீஸ் கூறுகிறது.