தமிழர்களை திட்டமிட்டு சுடவில்லை - சொல்கிறது ஆந்திர அரசு
ஹைதராபாத்: சித்தூர் என்கவுண்டர் திட்டமிட்டு நடந்த ஒன்றல்ல. அது போலி என்கவுண்டரும் அல்ல. ஆந்திர மாநில காவல்துறையினர் மீது கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தியதால்தான் என்கவுண்டர் நடந்தது. அது எதிர்பாராத ஒன்று என்று ஆந்திர அரசு கூறியுள்ளது.
மேலும் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் செம்மரங்களைக் கடத்திச் சென்றதாகவும், ஆயுதங்களுடன் இருந்ததாகவும் ஆந்திர அரசு கூறுகிறது. இந்த விளக்கத்தை மத்திய அரசிடமும், தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் அளித்துள்ளது ஆந்திர அரசு.
இதுகுறித்து ஆந்திர அரசு கூறுகையில், செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் சேஷாசலம் மலைப் பகுதியில், ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது அங்கு கடத்தல் நடைபெறுவதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து முதலில் கடத்தல்காரர்களை நிற்குமாறு அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் சரணடையும்படியும் உத்தரவிட்டனர்.
பலமுறை வேண்டுகோள் விடுத்தும் கடத்தல்காரர்கள் கேட்கவில்லை. இதையடுத்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் வானில் சுட்டனர் அதிரடிப்படையினர். அப்போதும் கடத்தல்காரர்கள் கேட்கவில்லை. மாறாக, 80க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்கள் போலீஸாரைத் தாக்கத் தொடங்கினர். கற்களையும் வீசித் தாக்கினர். குச்சிகளை எடுத்து அடிக்க வந்தனர். பலர் கோடாலிகளால் வெட்டவும் வந்தனர். அவர்களை சமாளிக்க முயன்ற போலீஸ் படையினர் வேறு வழியில்லாமல் துப்பாக்கிகளால் சுட நேரிட்டது.
கடந்த பல வருடங்களாகவே சேஷாசலம் பகுதியில் செம்மரக் கடத்தல் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்த கடத்தல் காரணமாக பெரும் பொருளாதார இழப்பு மாநில அரசுக்கு ஏர்பட்டு வருகிறது. எனவே செம்மர வளத்தைக் காக்க சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது என்று ஆந்திர அரசு கூறியுள்ளது.