செம்மரக் கடத்தல் வழக்கு: பூடான் எல்லையில் சிக்கிய செளந்தரராஜன் சித்தூர் கோர்ட்டில் ஆஜர்
சித்தூர்: செம்மரக் கடத்தல் வழக்கில் ஆந்திர போலீஸாரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த செளந்தரராஜன் சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மே 5ம் தேதி சிறைக் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.
சித்தூர் 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மாலை செளந்தரராஜனை போலீஸார் ஆஜர்படுத்தினர். விசாரணைக்குப் பின்னர் அவரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து செளந்தரராஜனை சித்தூர் சப் ஜெயிலுக்குக் கொண்டு சென்று போலீஸார் அடைத்தனர்.
முன்னதாக ஏப்ரல் 19ம் தேதி பூட்டான் எல்லையையொட்டியுள்ள மேற்கு வங்க மாநிலம் ஹசிமரா காட்டுப் பகுதியில் வைத்து செளந்தரராஜனை ஆந்திர மாநில போலீஸ் படை வளைத்துப் பிடித்தது.
செளந்தரராஜன் மீது நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவரைக் கைது செய்த பின்னர் இவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் 8 டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பூட்டான் எல்லைப் பகுதியிலிருந்து பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
சென்னையில் சிக்கிய நடிகர் சி. சரவணனிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது செளந்தரராஜன் குறித்து தெரியவந்தது. இதையடுத்து செளந்தரராஜனைப் போலீஸார் கைது செய்தனர். சரவணனிடமிருந்து ரூ. 10 கோடி மதிப்புள்ள 4.5 டன் செம்மரக் கட்டைகளை ஆந்திரப் போலீஸார் பறிமுதல் செய்தது நினைவிருக்கலாம்.