திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக திருவண்ணாமலைச் சேர்ந்த இருவர் கைது! - வீடியோ
திருப்பதி வனப்பகுதியில் செம்மரத்தை வெட்டிக் கடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கருணாகரன், முருகன் ஆகிய இருவரும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள்.
திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேரை ஆந்திராவின் செம்மர கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
திருப்பதி வனப்பகுதியில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் செம்மரத்தை வெட்டி கடத்துவதாகத் தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. செம்மரம் கடத்தியதாக 19 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து தமிழகத்தைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பதி வனப்பகுதியில் நேற்று பத்துக்கும் மேற்பட்டவர்கள் செம்மரங்களைக் கடத்தும்போது, போலீஸார் வந்ததால், தப்பித்து ஓட முயன்றுள்ளனர். அப்போது இருவரை செம்மரக் கடத்தல் தடுப்பு போலீஸ் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும், திருவண்ணாமலைச் சேர்ந்த முருகன் மற்றும் கருணாகரன் ஆவர். தப்பித்து ஓடிய மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
செம்மரம் கடத்தியதாக கூலித் தொழிலாளர்களையே கைது செய்யும் ஆந்திர போலீஸார் இந்த மாபியாவில் ஈடுபட்டிருக்கும் பெரும் பணக்கார்களை ஏன் பிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில்லை என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டாலும், கூலித் தொழிலாளர்கள் மட்டுமே திரும்பத் திரும்ப கைது செய்யப்படுகின்றனர்.